ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா கடுமையாகப் போராடியும் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஷிகர் தவன் 115 ரன்கள் விளாசினார். விராத் கோஹ்லி அரை சதம் போட்டார். டோணி கடைசியில் போராடிப் பார்த்தார். ஆனால் ஜடேஜா மற்றும் டோணியின் அவுட்டால் இந்தியாவிடம் கடைசி நேரத்தில் இருந்த வெற்றி, நியூசிலாந்து வசம் போய் விட்டது.
ஷிகர் தவன் தனது 2வது டெஸ்ட் சதத்தை இன்று பூர்த்தி செய்தார். பொறுமையாகவும், சிறப்பாகவும் ஆடிய அவர் 115 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரும் கோஹ்லியும் இணைந்தபோது இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானது. இருவரும் இணைந்து ரன் குவித்து வந்தனர்.

இந்த நிலையில் கோஹ்லி 67 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் தவனும் ஆட்டமிழந்தபோது இந்தியாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் டோணியும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ஃபைட் கொடுக்க ஆரம்பித்தனர்.
இருவரும் அணியை கிட்டத்தட்ட வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்று விட்டனர். ஆனால் ஜடேஜா 26 ரன்களில் அவுட்டாகி விட்டார். கிடைத்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்தி ஆடிய விதம் அபாரமாக இருந்தது.
அதேபோல கேப்டன் டோணியும் சிறப்பாக ஆடினார். 41 பந்துகளைச் சந்தித்த அவர் 39 ரன்கள் எடுத்திருந்தபோது நீல் வேக்னர் பந்தில் போல்ட் ஆகிப் போனார். இந்தியாவின் வெற்றி வாய்ப்பும் பறிபோனது.
பின்னர் வந்தவர்களில் ஜாகிர் கான் 17 ரன்கள் சேர்த்தார். இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 366 ரன்கள் எடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.