வெல்லிங்டன் : பட்ட காலிலே படும் என்ற சொல்லாடலுக்கு ஏற்ப நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சனுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட காலிலே மீண்டும் ஒரு காயம் ஏற்பட்டிருப்பது சோகத்தை கொடுத்திருக்கிறது.
கேன் வில்லியம்சனுக்கு ஏற்கனவே காலில் பிரச்சனை ஏற்பட்டு பல போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தற்போது தான் முழு உடல் தகுதியை எட்டி டெஸ்ட் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட தொடங்கினார். அண்மையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சதங்களை அடித்து வந்தார்.இதைப் போன்று ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணிக்காக கேன் வில்லியம்சன் பங்கேற்றார்.

இது உலகக்கோப்பை ஆண்டு என்பதால் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி அவருக்கு நல்ல அனுபவமாக இருந்திருக்கும். இந்த நிலையில் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் கேட்ச் பிடிக்கும் போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து தொடரிலிருந்து முற்றிலுமாக விலகிய வில்லியம்சன் தற்போது சொந்த நாடு திரும்பி உள்ளார்.
அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் வில்லியம்சனுக்கு வலது காலில் உள்ள முட்டி பகுதியில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருப்பது உறுதி ஆகி உள்ளது. இதனை சரி செய்ய வில்லியம்சன் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ஆனால் முட்டி பகுதியில் வீக்கம் இருப்பதால் அது குறைந்த உடன் தான் சிகிச்சை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறி விட்டார்கள்.
இந்த காயம் சரியாக எப்படியும் ஆறு மாதத்திற்கு மேல் ஆகும் என்பதால் வில்லியம்சன் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக விளங்கும் வில்லியம்சன் இல்லாதது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. வில்லியம்சன் இல்லாமல் நியூசிலாந்து அணி இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விளையாடிய 3 ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன் 13 சதங்களும் சராசரியாக 47 ரன்களும் அடித்திருக்கிறார். இது தமக்கு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ள வில்லியம்சன், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் உடல் தகுதியை எட்டும் முயற்சியில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார். வில்லியம்சன் கேப்டனாக இல்லை என்றால் அந்த பொறுப்புக்கு டாம் லாத்தம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.