வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. 2வது நாளின் முதல் செஷனிலேயே ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அட்கின்சன் அசத்திய நிலையில், பேட்டிங்கில் பெத்தல் மற்றும் டக்கெட் இருவரும் பொளந்து கட்டியுள்ளனர்.
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்கின் அபார சதம் காரணமாக 280 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்திருந்தது.

இதன்பின் 2வது நாள் ஆட்டத்தை பிளெண்டல் - ஓரூர்க் கூட்டணி தொடங்கியது. தொடர்ந்து கார்ஸ் வீசிய பந்தில் டாம் பிளெண்டல் 16 ரன்களில் போல்டாகி வெளியேற, அதே ஓவரிலேயே ஓரூர்க் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். பின்னர் கிளென் பிலிப்ஸ் - ஸ்மித் இணைந்து சிறிது பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அட்கின்சன் ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
இதனால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் 155 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. அதில் தொடக்க வீரர் கிராலி 8 ரன்களில் ஆட்டமிழக்க, டக்கெட் - பெத்தல் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தது. இவர்கள் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இருவரும் சதமடிப்பார்கள் என்று பார்க்கப்பட்டது. ஆனால் டிம் சவுதி பந்தில் பெத்தல் 96 ரன்களிலும், டக்கெட் 92 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த ஜோ ரூட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, ஹாரி ப்ரூக் அதிரடியாக அரைசதம் அடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த போப் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் - ரூட் இருவரும் இணைந்தனர்.
இதன்பின் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. இறுதியாக 2வது நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 76 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 378 ரன்களை எடுத்துள்ளது. ஜோ ரூட் 73 ரன்களும், ஸ்டோக்ஸ் 35 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி 533 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது. இதன் மூலமாக இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.