ஹாமில்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் கடைசி போட்டியில் களமிறங்கிய நியூசிலாந்து ஜாம்பவான் டிம் சவுதிக்கு இங்கிலாந்து அணி வீரர்கள் ஒன்றிணைந்து கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்த சம்பவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், 3வது டெஸ்ட் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியுடன் நியூசிலாந்து ஜாம்பவான் டிம் சவுதி ஓய்வை அறிவித்திருந்ததால், அவருக்கான ஃபேர்வெல் ஆட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இதன்பின் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து தேசிய கீதம் பாடும் போது டிம் சவுதி தனது மகளுடன் மைதானத்திற்கு வந்தார். அப்போது நியூசிலாந்து ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு கரகோஷம் எழுப்பினர். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு லேதம் - வில் யங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சிறப்பாக ஆடிய யங் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் லேதம் 135 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் வந்த ரச்சின் ரவீந்திரா 18 ரன்கள் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், பொறுப்புடன் ஆடிய வில்லியம்சன் 44 பந்துகளில் துரதிஷ்டவசமாக போல்டாகி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் வந்த வீரர்களில் மிட்சல் சான்ட்னர் அதிரடியாக விளையாடி அரைசதத்தை விளாசினார். பின்னர் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வந்த டிம் சவுதி, இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கார்ட் ஆஃப் ஹானர் மரியாதையை அளித்தனர். அவரும் தன் பங்கிற்கு கடைசி ஆட்டத்தில் 10 பந்துகளில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்த போட்டியில் 3 சிக்சர்களை விளாசியதன் மூலமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்லின் சிக்சர் சாதனையை சமன் செய்து அசத்தினார். இறுதியாக முதல் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்துள்ளது. சான்ட்னர் 50 ரன்களுடனும், ஓரூர்க் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இதனால் 2வது நாள் ஆட்டத்தின் முதல் சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணி கடைசி விக்கெட்டை வீழ்த்தி பேட்டிங் செய்ய களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.