கிறைஸ்ட்சர்ச்: இங்கிலாந்து அணியின் மூத்த வீரரும், டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவராகவும் இருக்கும் ஜோ ரூட் தனது 150ஆவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆகி பரிதாபமான சாதனையை செய்து இருக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கிய ஜோ ரூட் 150 ஆவது டெஸ்ட் போட்டியில் அடி எடுத்து வைத்து மைல்கல் சாதனையை நிகழ்த்தி இருந்தார்.
அதே சமயம், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். நியூசிலாந்து பந்துவீச்சாளர் நாதன் ஸ்மித் பந்து வீச்சில் ஜோ ரூட் பவுல்டு அவுட் ஆனார். இதை அடுத்து 150ஆவது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன மூன்றாவது வீரர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்தார்.

இதற்கு முன் இரண்டு ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் இந்த மோசமான சாதனையை செய்து உள்ளனர். ஸ்டீவ் வாஹ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர்தான் அந்த இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள். 2002 ஆம் ஆண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிராக ஸ்டீவ் வாஹ் தனது 150 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதில் அவர் டக் அவுட் ஆகி இருந்தார்.
அதேபோல 2010 அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ரிக்கி பாண்டிங் தனது 150ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அவரும் டக் அவுட் ஆகி இருந்தார். அதன் பின் 150 ஆவது போட்டியில் டக் அவுட் ஆன மூன்றாவது வீரர் என்ற மோசமான சாதனையை செய்து இருக்கிறார் ஜோ ரூட்.
இந்தப் போட்டியில் ஜோ ரூட் சொதப்பிய நிலையிலும் இங்கிலாந்து அணி 499 ரன்கள் குவித்தது. ஹாரி ப்ரூக் 171 ரன்களும், ஒல்லி போப் 77 ரன்களும் எடுத்து இருந்தனர். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து உள்ளது. 4 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வேற்று பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது.