பெங்களூர் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், சுரேஷ் ரெய்னா சதம் அடித்த பின் கொண்டாடும் முறையை அப்படியே செய்தார்.
இதைக் கண்ட இந்திய ரசிகர்கள் எதையுமே சொந்தமாக செய்யத் தெரியாதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் தான் இந்த சம்பவம் நடந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு தவறோ என எண்ணும் அளவுக்கு நியூசிலாந்து அணி ரன் குவித்து தள்ளியது.
நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி எப்படியும் மோசமாக ஆடப் போகிறது என நினைத்த போது அந்த அணியின் துவக்க வீரர் பாக்கர் ஜமான் அபாரமாக ஆடி சதம் அடித்தார்.

பாக்கர் ஜமான் வெறும் 63 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். பாகிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் ஜமான். அவர் சதம் அடித்த போது எதிரில் இருந்த பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், தன் வலது கையை மடக்கி அந்த சதத்தை கொண்டாடினார்.
இது சுரேஷ் ரெய்னாவின் பாணி. அவர் எப்போதும் அரைசதம் அல்லது சதம் அடித்தால் தன் வலது கையை உயர்த்தி தான் அதை கொண்டாடுவார். தன்னுடன் பேட்டிங் செய்யும் சக பேட்ஸ்மேன் சதம் அடித்தாலும் அவர் இதே போலத் தான் கொண்டாடுவார்.
பாபர் அசாமும், சுரேஷ் ரெய்னா போலவே கையை தூக்கி சதத்தை கொண்டாடியதால் அவர் ரெய்னாவை பின்பற்றுகிறார். சொந்தமாக எதையும் செய்ய மாட்டார் என ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். முன்பு பாபர் அசாம், விராட் கோலியை பின்பற்றுகிறார். அவரைப் போலவே ஷாட் ஆடுகிறார் என கூறுவார்கள். அதில் எந்த தவறுமில்லை என்றாலும், அவர் இந்திய வீரர்கள் பலரை பின்பற்றி வருகிறார் என்பது இதுபோன்ற சம்பவங்களால் வெளி உலகுக்கு தெரிய வருகிறது.
இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் வேகமாக ரன் எடுத்தால் மட்டுமே டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற முடியும் என கணித்து பாபர் அசாம் - பாக்கர் ஜமான் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. இடையே மழையால் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் தடைப்பட்டு துவங்கிய போது சிக்ஸராக அடித்து அதிரடி காட்டினர். அதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி டிஎல்எஸ் முறைப்படி வெற்றிக்கு அருகே சென்றது.