ஹாமில்டன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தற்போது சமன் செய்துள்ளது. செடான் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் அதிரடியாக விளையாடிய டெவான் கான்வே 60 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோருக்கு முக்கிய அடித்தளம் அமைத்தார். டாம் லேதம் 11 ரன்களும், நிக் கெல்லி 12 பந்துகளில் 21 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 14 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று கடினமானதாக மாறிய நிலையில், கான்வேவின் சிறப்பான ஆட்டம் அணிக்கு கைகொடுத்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடி காட்டிய ஜோஷ் கிளார்க்சன் வெறும் 9 பந்துகளில் 26 ரன்கள் விளாசினார். நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் மட்டும் 24 ரன்கள் குவித்தது.

பின்னர் 176 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. அந்த அணி 15.3 ஓவர்களில் வெறும் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அதிகபட்சமாக ஜார்ஜ் லின்டே 12 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்து சிறிது நேரம் போராடினார்.
நியூசிலாந்து தரப்பில் பென் சியர்ஸ் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் 16 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். தென்னாப்பிரிக்க அணியின் 10 விக்கெட்டுகளும் கேட்ச் மூலமாகவே வீழ்த்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பனிப்பொழிவு இருக்கும் என நினைத்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம், ஆனால் நேரம் செல்லச் செல்ல ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகக் கடினமாக மாறியதே தோல்விக்கு முக்கியக் காரணம் என தென்னாப்பிரிக்க கேப்டன் கேசவ் மகராஜ் தெரிவித்தார். இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
