நியூசிலாந்து : நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் டி20 போட்டி மவுண்ட் மாங்குனி நகரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டிம் ராபின்சன் 11 ரன்களிலும், ரச்சின் ரவிந்த்ரா, மார்க் சாப்மேன், கிளேன் பிலிப்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட டாரல் மிட்செல் அபாரமாக விளையாடி 42 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதைப் போன்று இறுதியில் மைக்கேல் பிராஸ்வெல் 33 பந்துகளில் 59 ரன்கள் விளாச நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதில் சிஎஸ்கே வீரர் பதிரானா 4 ஓவரில் 60 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க ஜோடி நிசாங்கா மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து அணி தடுமாறியது. 13 ஓவர்களில் எல்லாம் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் குவித்தது. இதில் கமிண்டூ மெண்டிஸ் 36 பந்துகளில் 46 ரன்கள் விளாச, நிசாங்கா 60 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார்.
குசல் மெண்டீஸ் ஆட்டமிழந்த பிறகு குசல் பெரேரா, ராஜபக்ஷா, ஹசரங்கா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது. அப்போது அதிரடியாக விளையாடி வந்த நிஷாங்கா 90 ரன்களில் ஆட்டம் இழந்தார்.அதன் பிறகு வந்த மற்ற வீரர்கள் எல்லாம் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப ஈசியாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் இலங்கை அணி வெறும் 11 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
இலங்கை அணி 153 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் என்ற நிலையிலிருந்து 159 ரன்களுக்கு எட்டு விக்கெட் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை வீரர்கள் சோக் ஆகி வெற்றியை பறி கொடுத்தனர்.