காலே : இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடப் போகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை காலையில் தொடங்குகிறது. இந்த போட்டி மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுகிறது.
காரணம் பொதுவாக டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாட்கள் தான் நடைபெறும். ஆனால் இந்த டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆம், செப்டம்பர் 18ஆம் தேதி இந்த போட்டி தொடங்கும் நிலையில் மூன்று நாட்கள் முடிவடைந்த பிறகு நான்காவது நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்பெல்லாம் டெஸ்ட் போட்டிகள் 6 நாட்கள் நடைபெறும். ஒரு நாள் இடையில் ஓய்வு வழங்கப்பட்டு பின்னர் மீண்டும் டெஸ்ட் போட்டி விடப்பட்ட இடத்திலிருந்து தொடங்கப்படும். இதற்கு காரணம் வெளிநாட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்பதால் அதில் மக்கள் பங்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த ஓய்வு நாள் வழங்கப்பட்டது.
காலப்போக்கில் அந்த ஓய்வு நாள் ரத்து செய்யப்பட்டு தொடர்ந்து ஐந்து நாட்களும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்றது. இந்த நிலையில் மகாமகம் திருவிழா போல் தற்போது ஓய்வு நாள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டு வருகிறது. கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் 2008 ஆம் ஆண்டு வங்கதேசமும் இலங்கையும் டாக்காவில் மோதிய ஆட்டத்தில் ஓய்வு நாள் சேர்க்கப்பட்டது.
அதற்கு காரணம் வங்கதேசத்தில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஓய்வு தினம் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது அதேபோல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் வீரர்களும் மக்களும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தற்போது ஓய்வு நாள் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக ஓய்வு நாள் சேர்க்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு ஆகும் இந்த போட்டியில் ஜிம்பாபேவும் இலங்கை அணியும் மோதியது. அப்போது முழு நிலவு நாள் ஒன்றில் நாட்டில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. புத்த மதத்திற்கு இந்த முழு நிலவு நாள் மிகவும் முக்கியமானது என்பதால் அப்போது இந்த ஓய்வு நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ஓய்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தும் இலங்கையும் கடந்த 2023 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மோதியது. இதில் தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிற நியூசிலாந்து அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது.
அதன் பிறகு டி20 யில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வென்றது. நியூசிலாந்து அணி அண்மையில் இந்தியாவுக்கு வந்து நொய்டாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருந்தது. ஆனால் அந்த போட்டி மழையால் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நியூசிலாந்து அணி பின் இந்தியா மற்றும் இங்கிலாந்து எதிராக டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து விளையாட உள்ளது. அதன் பிறகு மீண்டும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.