கொழும்பு: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கையை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்திக் கொண்டதுடன், இலங்கை அணி நடப்பு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. ரச்சின் ரவீந்திராவின் ஆட்டம் நியூசிலாந்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, ஃபின் ஆலன் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தனர். இதில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ரச்சின் ரவீந்திரா 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதில் 3 பவுண்டரி, 1 சிக்சர் அடங்கும். இதன் மூலம் ஒன்பது ஓவர்களில் 73/2 என்ற வலுவான நிலையில் இருந்தது.

ஆனால், மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்மந்தா சாமீரா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றியது. 9.3 ஓவர் முதல் 12.1 ஓவர் வரை வெறும் 9 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த நியூசிலாந்து அணி தடுமாறியது. தீக்ஷனா தனது கேரம் பந்துகளால் ஆலன், ரவீந்திரா போன்ற முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.

இந்த சவாலான கட்டத்தில், கோல் மெக்கான்சி 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 26 பந்துகளில் 47 ரன்களும்குவித்து முக்கியப் பங்காற்றினர். இவர்கள் ஏழாவது விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தனர். கடைசி நான்கு ஓவர்களில் 70 ரன்கள் குவிக்கப்பட்டு, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது.
169 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு பேட்டிங் மீண்டும் மளமளவென சரிந்தது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிராக வெறும் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது போலவே இம்முறையும் தடுமாறியது. இறுதியாக 107/8 என்ற நிலையில், 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
168 ரன்கள் என்ற இலக்கை தற்காக்கும் முயற்சியில், நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். மத்தேயு ஹென்ரி, தனது முதல் பந்திலேயே 137 கி.மீ வேகப்பந்தில் பதும் நிசங்காவை கோல்டன் டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். தொடர்ந்து, தனது அடுத்த ஓவரின் முதல் பந்தில் சரித் அசலங்காவையும் 5 ரன்களல் ஆட்டமிழந்தார். ஹென்ரியின் இந்த அதிரடி பந்துவீச்சால், இலங்கை பவர்பிளேயில் வெறும் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பெரும் தடுமாற்றத்தைச் சந்தித்தது.

ஹென்ரியின் அபாரப் பந்துவீச்சுக்குப் பிறகு, ரச்சின் ரவீந்திரா சுழற்பந்துவீசி இலங்கைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். அவர் வீசிய பந்தின் வேகத்தை சரியாக கணிக்காத குசால் மெண்டிஸை சாமர்த்தியமாக ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார். அடுத்த இரண்டு பந்துகளுக்குப் பிறகு, பவன் ரத்நாயக்காவும் ஸ்டம்பிங் ஆனார்.
ரவீந்திரா தனது சிறப்பான பந்துவீச்சைத் தொடர்ந்து, கேப்டன் தசுன் ஷனாகா மற்றும் துஷான் ஹேமந்தா ஆகியோரையும் வெளியேற்றி 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது சிறந்த ஆட்டத்தைப் பதிவு செய்தார். மிட்செல் சான்ட்னர் 19 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்து, இலங்கையின் அதிகபட்ச ரன் அடித்த கமிந்து மெண்டிஸை 31 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் முலம் இலங்கை அணி டி20 உலககோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
இந்த மகத்தான வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணிக்கு இரண்டு முக்கியமான புள்ளிகள் கிடைத்தன. இதன்மூலம் அவர்கள் அரையிறுதிக்குக் கிட்டத்தட்ட தகுதி பெற்றனர். பாகிஸ்தான் அணி தங்கள் கடைசி போட்டியில் இலங்கைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். நியூசிலாந்து அடுத்ததாக வெள்ளிக்கிழமை இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. ஏற்கனவே வெளியேறிய இலங்கையுடன் பாகிஸ்தான் சனிக்கிழமை பல்லேகலேவில் மோதவுள்ளது.