ஆன்டிகுவா : நியூசிலாந்து அணிக்காக விளையாடும் கடைசி டி20 உலகக்கோப்பை இதுதான் என்று நட்சத்திர வீரர் போல்ட் அறிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுடன் நியூசிலாந்து அணி வெளியேறி இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் அடைந்த மெகா தோல்வி, அந்த அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. ஐசிசி தொடர்களில் குறைந்தபட்சம் அரையிறுதி சுற்றுக்காவது முன்னேறி வந்த நியூசிலாந்து அணி, இம்முறை குரூப் சுற்றுடன் வெளியேறி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் ஜாம்பவான் ட்ரென்ட் போல்ட் மற்றொரு அதிர்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். உகான்டா அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய போல்ட், 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பின் போல்ட் பேசுகையில், நியூசிலாந்து அணிக்காக விளையாடும் கடைசி டி20 உலகக்கோப்பை இதுதான் என்று நினைக்கிறேன். இந்த நேரத்தில் டிம் சவுதியுடன் பவுலிங்கில் பார்ட்னர்ஷிப் அமைத்த தருணங்கள் நிழலாடுகின்றன. நாங்கள் இருவரும் இணைந்து எண்ணற்ற ஓவர்களை வீசி இருக்கிறோம். இந்த பார்ட்னர்ஷிப் குறித்து நன்றாக அறிவேன்.
களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியிலும் சவுதி தான் எனது சிறந்த நண்பர். இன்னும் சில போட்டிகளில் பவுலிங் செய்வேன் என்று நினைப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே நியூசிலாந்து அணியின் சென்ட்ரல் ஒப்பந்தத்தை நிராகரித்த ட்ரென்ட் போல்ட், உலகம் முழுவதும் நடந்து வரும் டி20 லீக் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனால் ட்ரென்ட் போல்ட் விரைவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நியூசிலாந்து அணியின் வாக்னர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது போல்ட் மற்றும் டிம் சவுதி இருவரும் தங்களின் கடைசி நேர பயணத்தில் இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.