மவுண்ட் மங்கவுனி: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் டெவோன் கான்வேயின் அபாரமான ஆட்டம், ஐபிஎல் அணிகளை மலைக்க வைத்துள்ளது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்தியத் தீவுகள் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளன. இருப்பினும், வெற்றி பெற இன்னும் 419 ரன்கள் தேவைப்படுகிறது.
மொத்தம் 462 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை நோக்கிச் செல்லும் மேற்கிந்தியத் தீவுகள், இதுவரை எந்த அணியும் நான்காவது இன்னிங்ஸில் 418 ரன்களுக்கு மேல் எடுத்து டெஸ்ட் போட்டியை வென்றதில்லை என்ற வரலாற்றுச் சவாலை எதிர்கொள்கிறது. தற்போது பிராண்டன் கிங் 37 ரன்களுடனும், ஜான் கேம்ப்பெல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தப் போட்டியில் டெவோன் கான்வே தனது பேட்டிங் திறமையால் ஈர்த்தார். முதல் இன்னிங்சில் 227 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்களும் விளாசி, நியூசிலாந்தின் இமாலய ஸ்கோருக்கு முக்கிய பங்காற்றினார். இதன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் ஒரே போட்டியில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்த 10வது வீரர் என்ற பெருமையை கான்வே பெற்றார்.
பிரையன் லாரா, சுனில் கவாஸ்கர், குமார் சங்கக்காரா போன்ற ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலில் கான்வே இணைந்துள்ளார். அத்துடன், ஒரு டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த ஆறாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான கான்வே தனது அதிரடியான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார்.
கான்வேயின் இந்த சாதனைகளுக்கு இணையாக, இணை பேட்ஸ்மேன் டாம் லாதம் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். முதல் இன்னிங்ஸில் 137 ரன்கள் அடித்த லாதம், இரண்டாவது இன்னிங்ஸில் 101 ரன்கள் சேர்த்தார். கான்வேயும் லாதமும் இணைந்து ஒரே போட்டியில் 515 ரன்கள் குவித்து, தொடக்க ஜோடிக்கான உலக சாதனையை நிலைநாட்டினர்.
இந்த உலக சாதனையில், முதல் இன்னிங்ஸில் இருவரும் சேர்ந்து குவித்த 323 ரன்கள் ஒரு பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. நியூசிலாந்து அணி, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ரன் வேகத்தை கணிசமாக அதிகரித்தது. கான்வே மற்றும் லாதம் இருவரும் சேர்ந்து ஒரு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கும் மேல் குவித்து, 157 ரன்களைச் சேர்த்தனர்.
கேப்டன் கேன் வில்லியம்சன் 40 ரன்களும், ரச்சின் ரவீந்திரா வெறும் 23 பந்துகளில் 46 ரன்களும் அடித்து, அணியின் ஸ்கோரை 300 ரன்களுக்கு மேல் உயர்த்தினர். முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸை நியூசிலாந்து அணி 420 ரன்களில் சுருட்டியது. இதன் மூலம் 155 ரன்கள் முன்னிலை பெற்றது.மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கவேம் ஹார்வர்ட் மட்டுமே சிறப்பாக விளையாடி 123 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜேக்கப் டஃபி, தனது சிறந்த ஆட்டத்தை தொடர்ந்தார், 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தினார். அஜாஸ் படேல் 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார். கான்வேவை சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன்பே விடுவித்து இருந்தது, இந்த சூழலில் ஐபிஎல் மினி ஏலத்தில் கான்வேவை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த கோபத்தில் மீண்டும், தனது பேட்டிங் திறமையை கான்வே நிரூபித்தார்.