புல்வாயோ: ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி புல்வாயோ நகரில் நடைபெற்று வருகிறது.
இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதலில் 125 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளும் இழந்தது. இதில் நியூசிலாந்து வீரர் மார்க் ஹென்றி ஐந்து விக்கெட்டுகளும், ஜகாரி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதை அடுத்து நியூசிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. தொடக்க வீரராக விளையாடிய சிஎஸ்கே வீரர் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான வில் யங் 101 பந்துகளை எதிர் கொண்டு 74 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
சிறப்பாக விளையாடிய கான்வே 143 பந்துகளில் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். இதை அடுத்து ஜேக்கப் டூபி 36 ரன்களில் ஆட்டம் இழந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கான்வே 245 பந்துகளை எதிர் கொண்டு 153 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இதில் 18 பவுண்டரிகள் அடங்கும்.
இதேபோன்று ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் சிஎஸ்கே வீரர் ரவீந்திரா ஜோடி சேர்ந்து ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் தடுமாறினர். 245 பந்துகளை எதிர்கொண்ட அவர் நிக்கோல்ஸ் 150 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி வரும் ரச்சின் ரவீந்திரா 139 பந்துகளில் 165 ரன்கள் குவித்து களத்தில் நின்றார்.
இதில் 21 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் எடுத்திருக்கின்றது. நியூசிலாந்து வீரர்களின் விக்கெட்டை எடுக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் தடுமாறி வருகின்றனர். தற்போது ஜிம்பாப்வேவை விட முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 476-ரன்கள் கூடுதலாக அடித்திருக்கின்றது.