உலகக் கோப்பை, ஐசிசி ரேங்கிங் எல்லாம் விடுங்க… தொடரை வெல்ல முயற்சி பண்ணுங்க!
டர்பன்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருதினப் போட்டித் தொடர் நாளை டர்பனில் துவங்குகிறது. 2019 உலகக் கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு இந்தத் தொடர் உதவும், ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதையெல்லாம்விட, தென்னாப்பிரிக்காவில் அந்த அணிக்கு எதிரான தொடரில் முதல் முறையாக வெற்றி பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.
3 டெஸ்ட்கள், 6 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்றுள்ளது.
டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த நிலையில், கடைசி ஆட்டத்தில் வென்று, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை இழந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் மண்ணில், ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை என்ற மோசமான சாதனை தொடர்கிறது.

நாளை துவங்குகிறது ஒருதினப் போட்டி
இந்த நிலையில், 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர், டர்பனில் நாளை துவங்குகிறது. டெஸ்ட் தொடரை இழந்தபோதும், ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐசிசி தரவரிசையில் இடம்
அதே நேரத்தில் ஒருதினப் போட்டிக்கான தரவரிசையில், தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. டெஸ்ட் போட்டியில், இரு அணிகளுக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் மிகவும் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில், ஒருதினப் போட்டியில், ஒரு புள்ளி வித்தியாசம் மட்டுமே உள்ளது. அதனால், 6 போட்டித் தொடரில், வெற்றியைப் பொறுத்து ஒவ்வொரு போட்டியிலும், இரு அணிகளும் மாறி மாறி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

உலகக் கோப்பைக்கு பயிற்சி
2019ல் உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளதால், இந்த ஆண்டு நடக்கும் அனைத்து ஒருதினப் போட்டிகளும் அனைத்து நாடுகளும் முக்கியமாகும். இந்த போட்டிகளின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு, அணியின் பலம், பலவீனத்தை தெரிந்து கொள்ள முடியும்.

ஒரே மனநிலையில் இரு அணிகளும்
அந்த வகையில், நாளை துவங்கும் ஒருதினப் போட்டித் தொடர், உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்திய அணிக்கு உதவும். இதே மனநிலையில்தான் தென்னாப்பிரிக்காவும் இருக்கும். அதனால், பலத்த போட்டியை எதிர்பார்க்கலாம்.

சுவராசியமான போட்டிகள்
இரு அணிகளிலும் மிகவும் திறமையான வீரர்கள் உள்ளனர். இந்திய அணியைப் பொறுத்தவரை, 17 பேரில், 8 பேர் மட்டுமே டெஸ்ட் தொடரில் விளையாடினர். அதேபோல் தென்னாப்பிரிக்காவிலும் டெஸ்ட் தொடரில் விளையாடிய 9 பேர் மட்டுமே ஒருதினப் போட்டியில் விளையாட உள்ளனர். இந்த ஒருதினப் போட்டி ஸ்பெஷலிஸ்ட்கள் களமிறங்க உள்ளதால், ஒவ்வொரு போட்டியும் சுவாரசியமாக இருக்கும்.

நான்கு முறையும் தோல்வி
இதையெல்லாம் விட, தென்னாப்பிரிக்காவில், அந்த அணிக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை இந்தியா இதுவரை வென்றதில்லை. இதுவரை நான்கு முறை இந்தியா தென்னாப்பிரிக்காவில் விளையாடியுள்ளது. 1992-93ல் 5-2, 2006-07ல் 4-0, 2010-11ல் 3-2, 2013-14ல் 2-0 என தென்னாப்பிரிக்காவே தொடர்களை வென்றுள்ளது.
டெஸ்ட் தொடரில் கோட்டைவிட்டதுபோல, இதில் கோட்டைவிடாமல், தொடரை வெல்வதற்கு கோஹ்லி அண்ட் கோ முயற்சி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய அணி:
விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ஷிகார் தவான், மகேந்திர சிங் டோணி, ஸ்ரேயாஸ் ஐயர், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, மனீஷ் பாண்டே, ஹார்திக் பாண்டயா, அக்சார் படேல், அஜங்யா ரஹானே, ஷர்துல் தாக்குர்


Click it and Unblock the Notifications