லக்னோ: லக்னோ அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் லக்னோ அணி இரு ஆண்டுகளிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அறிமுகமான முதல் இரு ஆண்டுகளிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது அந்த அணி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணியாக மாற வேண்டுமென்றால் அதிக ரசிகர்கள் இருக்க வேண்டும்.

அதற்கு சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும். அதேபோல் ரிவல்ரி அணிகளை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு படிநிலைகள் உள்ளது. அதில் வெற்றிகரமாக லக்னோ அணி ரிவல்ரி அணியை மட்டும் உருவாக்கியுள்ளது. ஆர்சிபி அணியுடனான போட்டியின் போது விராட் கோலியுடன் கம்பீர் மோதலில் ஈடுபட, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அதிர்ச்சியடைந்தது. இந்த நிலையில் லக்னோ அணி அடுத்தக் கட்டத்தை நோக்கி முன்னேற அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதில் முதல் பணியாக பயிற்சியாளர் ஆண்டி பிளவரை மாற்ற முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரை கொண்டு வர லக்னோ அணி திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி மோசமான நிலையில் இருந்ததில் இருந்து, டி20 சாம்பியனாக உருவாக்கியவர் ஜஸ்டின் லாங்கர். இவரின் ஆக்ரோஷமான மனநிலையை, லக்னோ அணிக்கு சரியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் - ஜஸ்டின் லாங்கர் இடையே நல்ல நட்பு உள்ளது. கவுதம் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடிய காலத்தில் ஜஸ்டின் லாங்கர் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். அதேபோல் ஜஸ்டின் லாங்கரை பரிந்துரை செய்தது கவுதம் கம்பீர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜஸ்டின் லாங்கரை சந்திப்பதற்காக லக்னோ அணி நிர்வாகிகள் குழு லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.