அப்படியே மெதுவா ஓடி வந்து.. பும்ரா மாதிரியே பவுலிங் போடும் பாட்டி..! தெறிக்க விட்ட வைரல் வீடியோ
மும்பை: பும்ராவை போல் ஒரு பாட்டி பந்து வீச ஓடி வருவது போன்ற வீடியோ காட்சிகளில் சமூக வலைத்தளங்களில் கன்னாபின்னாவென்று வைரலாகி வருகின்றது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையே புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா செல்லவில்லை. அரையிறுதியில் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு தோல்வியை நியூசிலாந்திடம் இந்தியா சந்தித்தது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஏதாவது ஒரு ஸ்டைல்
ஒவ்வொரு உலக கோப்பையிலும் ஏதேனும் ஒரு வீரரின் ஸ்டைல் படு தீவிரமாக பரவும். இந்த முறை அது இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள பல அணிகளில், பவுலர்கள் ஒவ்வொரு ஸ்டைலில் பவுலிங் போடுவது வழக்கம்.

பாட்டி பவுலிங்
ஆனால் டெத் பவுலர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா பந்து வீசும் விதம் மிகவும் அலாதியாக இருக்கின்றது. குறைவான தூரம் ஓடிவந்து, 145 கிமீ வரை பந்து வீசுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, பும்ராவை போல ஒரு வயதான பாட்டி பந்து வீச ஓடி வருவது போன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
ஒரு வீட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் புடவையுடன், கண்ணாடி அணிந்த பாட்டி ஒருவர் கையில் ஒரு பெரிய பந்தை வைத்துக் கொண்டு நிற்கிறார். அந்த பந்து.. குழந்தைகள் விளையாடும் பெரிய பந்தாகும். கிரிக்கெட் பந்து அல்ல.

அந்த பாணி
தமது இரு கைகளாலும் பும்ரா போன்று அந்த பந்தை கெட்டியாக பிடித்துக் கொள்கிறார் அந்த பாட்டி. பின்னர் களத்தில் பும்ரா எப்படி பவுலிங் போட ஓடி வருவாரோ, அதே போன்ற ஸ்டைலுடன் ஓடி வருகிறார்.
பும்ரா பாராட்டு
சில விநாடிகளே நீடிக்கும் இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி இருக்கிறது. பாட்டியின் அசத்தல் ஓட்டத்தைப் பார்த்து பும்ரா தனது டுவிட்டரில் பாராட்டி உள்ளார். இந்த நாள் என் பொன்னான நாள் என்று அதில் அவர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications