Neeraj chopra : பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலே 89.34 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார்
இதன் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நீரஜ் சோப்ரா, தொடர்ந்து பல்வேறு தொடர்களில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்று வந்தார். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 87.58 மீட்டர் தூரம் தான் வீசி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

தற்போது அவருக்கு கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. பல வீரர்களும் அண்மையில் நடைபெற்ற தொடர்களில் 90 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து நீரஜ் சோப்ராவுக்கு இம்முறை கடும் சவால்கள் அளித்தனர். இதனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் நீரஜ் சோப்ரா தகுதிச்சுற்றில், தன்னுடைய முதல் முயற்சியிலேயே 89.34 மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதே போன்று பாகிஸ்தான் வீரர் அர்ஸ்த் நதீம் தன்னுடைய முதல் முயற்சியில் 86.59 மீட்டர் தூரம் வீசி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார். இந்த பிரிவில் களமிறங்கிய மற்றொரு இந்திய வீரரான கிஷோர் சேனா 80.21 மீட்டர் தூரம் வீசி தொடரிலிருந்து வெளியேறினார்.
கடந்த ஒலிம்பிக்கை விட தற்போது நீரஜ் அதிக தூரம் வீசி இருக்கிறார். இதனால் இம்முறை மீண்டும் அவர் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு 10 மணி அளவில் நீரஜ் சோப்ரா பங்கேற்கும் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இதில் அவர் தங்கம் வென்றால் தொடர்ந்து இரண்டு தங்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைப்பார்.