மும்பை: 33வது ஒலிம்பிக் தொடர் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டு வீரர்களும் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீவிரமாக களமாடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் பபுதா 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 4வது இடத்தில் நிறைவு செய்து பதக்க வாய்ப்பை இழந்துள்ளார்.
முதல்முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற அவர், இறுதிப்போட்டியில் 4வது இடத்தில் நிறைவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். ஏனென்றால் ஒலிம்பிக் பதக்கத்தை 12வது முறையாக இந்தியா ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்டுள்ளது. இதுவரை இறுதிப்போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் 12 முறை 4வது இடத்தில் நிறைவு செய்து பதக்கம் வெல்ல முடியாமல் திரும்பியுள்ளனர்.

1956ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் இந்திய கால்பந்து அணி 4வது இடத்தில் நிறைவு செய்து பதக்கம் வெல்ல முடியாமல் சோகத்தில் திரும்பியது. அதேபோல் 1960 ரோம் ஒலிம்பிக்கில் மில்கா சிங் தடகளத்தில் 4வது இடத்தில் நிறைவு செய்து பதக்கம் வெல்ல முடியாமல் வெளியேறினார். அதேபோல் 1984ல் 400 மீட்டர் ஹர்டில்ஸில் பிடி உஷா 4வது இடத்திற்கு முடித்து தோல்வியடைந்தார்.

அதேபோல் 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்ராணி தேவி பளு தூக்குதலில் 4வது இடத்தில், ஆடவர் இரட்டையர் டென்னிஸில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஆகியோரும் வெண்கலத்தை மிஸ் செய்தனர். அதுமட்டுமல்லாமல் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் ஜாய்தீப் கர்மாகர், 2016 ரியோ ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா, கலப்பு இரட்டையர் டென்னிஸில் போபன்ன - சானியா மிர்சா ஆகியோரும் வெண்கலம் வெல்ல முடியாமல் 4வது இடத்தில் தோல்வியடைந்து வெளியேறினர்.
அதுமட்டுமல்லாமல் ஜிம்னாஸ்டிக்ஸில் தீபா கர்மாகர், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, கோல்ஃப் வீராங்கனை அதிதி அசோக் ஆகியோரும் 4வது இடத்தில் நிறைவு செய்து பதக்கம் வெல்ல முடியாமல் வெளியேறினர். இதனால் அழுத்தமான சூழல்களில் இந்திய வீரர்கள் தோல்வியடைவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.