பாரிஸ்: ஒலிம்பிக் வரலாற்றில் 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஹாக்கி அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி மிரட்டல் சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1972ஆம் ஆண்டு முனிச்சில் நடந்த ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியா ஹாக்கி அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் நடந்த ஒலிம்பிக் தொடர்களில் ஒருமுறை கூட இந்திய ஹாக்கி அணியை ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை.
கிட்டத்தட்ட 52 ஆண்டு கால கனவை ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி முறியடித்துள்ளது. பெல்ஜியம் அணியுடன் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்த போது, இந்திய அணி இம்முறை பதக்கம் வெல்ல வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கோல்கீப்பர் கூட இல்லாமல் இந்திய வீரர்கள் கோல் அடிக்க தீவிரமாக போராடினர்.

இந்த நிலையில் குரூப் சுற்றில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சர்வதேச தரவரிசையில் 4வது இடத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது கடினமான விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் ஆட்டம் தொடங்கிய 12வது நிமிடத்திலேயே இந்திய வீரர் அபிஷேக் முதல் கோலை அடித்து அசத்த, 13வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடுத்த கோலை அடித்து ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மறுமுனையில் ஆஸ்திரேலியா அணி எடுத்த கோல் அடிக்க எடுத்த அத்தனை முயற்சிகளையும் இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அரண் போல் நின்று தடுத்து நிறுத்தினார். ஆனால் 2வது குவார்ட்டரில் ஆஸ்திரேலியா அணியின் தாமஸ் க்ரைக் 25வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 2-1 என்ற அந்தரத்தில் இருந்த நிலையில், 3வது குவார்ட்டரில் பெனால்டி ஸ்ட்ரோக் மூலமாக ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவின் 3வது கோலை அடித்து அசத்தினார்.
பின்னர் 4வது குவார்ட்டரில் ஆஸ்திரேலியா அணியின் பிளேக் கோவர்ஸ் ஒரு கோல் அடித்த நிலையில், ஆட்டம் 3-2 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. இதன் மூலமாக குரூப் சுற்றில் 3 வெற்றி, ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஒலிம்பிக் தொடரில் 52 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியுள்ளதால், இந்திய அணி இம்முறையும் பதக்கத்துடன் நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.