பாரிஸ் : இந்திய ஹாக்கி அணியின் தோனி என்று அழைக்கப்படும் கோல் கீப்பர் பி ஆர் ஸ்ரீஜேஸ் பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான ஸ்ரீஜேஷ், இதுவரை இந்திய அணிக்காக 328 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
கேரளாவை சேர்ந்த ஸ்ரீஜேஷ் 2006 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். உலகின் சிறந்த ஹாக்கி கோல் கீப்பர்களில் ஒருவராக ஸ்ரீஜேஸ் அறியப்படுவார். கடந்த 2020 ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றதில் , இவருடைய பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

ஹாக்கி உலக சாம்பியன்ஷிப் தொடர், காமன்வெல்த் போட்டிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு தொடர்களில் மொத்தமாக ஸ்ரீஜேஷ் 16 முறை பதக்கங்களை வென்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு ஆசிய போட்டிகளில் ஸ்ரீஜேஸ் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதிப் போட்டியில் இரண்டு பெனால்டி ஸ்ட்ரோக்குகளை கோல் கீப்பராக தடுத்தார். இதன் மூலம் இந்தியா தங்கப்பதக்கத்தை வென்றது.
இதேபோன்று 2014 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை, 2018 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதையும் ஸ்ரீஜேஸ் கைப்பற்றி இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ஸ்ரீஜேஸ், தலைமையில் இந்திய ஹாக்கி அணி சாம்பியன்ஸ் கோப்பையில் வெள்ளி பதக்கத்தை தட்டிச் சென்றது. ரியோ ஒலிம்பிக்கில் ஸ்ரீஜேஸ் தலைமையிலான இந்திய அணி கால் இறுதி சுற்று வரை முன்னேறியது.
இதைப்போன்று 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, 2023 ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன் கோப்பை, 2022 ஆசிய கோப்பை ஆகியவற்றில் இந்தியா தங்கம் வெல்ல ஸ்ரீஜேஸ் முக்கிய காரணமாக இருந்தார். இதேபோன்று விளையாட்டுத்துறையில் சிறந்த வீரர்களுக்கான கேல் ரத்னா விருதை 2021 ஆம் ஆண்டு ஸ்ரீஜேஸ் கைப்பற்றினார். இந்த நிலையில் பாரிஸ் தொடரில் கடைசி ஒரு முறை இந்திய அணிக்காக விளையாட போகிறேன் என்று அறிவித்துள்ள ஸ்ரீஜேஸ், தன்னுடைய ஹாக்கி வாழ்க்கையை பெருமையுடன் திரும்பி பார்ப்பதாக கூறியுள்ளார்.
தமக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்ட ஸ்ரீஜேஷ் தம் மீது நம்பிக்கை வைத்த இந்திய மக்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.