தரம்சாலா: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய கடைசி நேரத்தில் போராடிய கேசவ் மகாராஜின் பேட்டில் "ஓம்" ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே பல்வேறு ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாக கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 245 ரன்களை விளாசியது.

82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய போதும், கேப்டன் எட்வர்ட்ஸ், அபாரமாக விளையாடி 78 ரன்கள் சேர்த்தார். இவருக்கு துணையாக கடைசி நேரத்தில் ஆர்யன் தத் 9 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 43 ஓவர்களில் 246 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
வலிமையான அணியாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்கா, கத்துக்குட்டி அணியான நெதர்லாந்திடம் வீழ்ந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் நேற்றைய ஆட்டத்தில் ரசிகர்களிடையே இன்னொரு விவகாரமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் கேசவ் மகாராஜ் 37 பந்துகளில் ஒரு சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய கேசவ் மகாராஜின் பேட்டில் இந்து மதத்தின் "ஓம்" ஒட்டப்பட்டிருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடினாலும் கேசவ் மகாராஜ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் முப்பாட்டன் காலத்திலேயே தென்னாப்பிரிக்காவில் கட்டட வேலைக்காக சென்று அங்கேயே இருந்துவிட்டனர். இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த கேசவ் மகாராஜ், இன்றளவும் இந்து மதத்தையும் இந்திய மரபுகளையும் பின்பற்றி வருகிறார்.
2016ஆம் ஆண்டு முதலே தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடி வரும் கேசவ் மகாராஜ், தற்போது தென்னாப்பிரிக்கா டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல பேட்ஸ்மேன் என்பதால், உலகக்கோப்பை தொடரில் கேசவ் மகாராஜ் தென்னாப்பிரிக்கா அணிக்கு முக்கியமான துருப்புச்சீட்டாக இருப்பார் என்று ரசிகர்களிடையே கணிக்கப்படுகிறது.