மான்செஸ்டர் : 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதே நாளில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா லீக் சுற்று முடிவிலே வெளியேறிவிடும் என அனைவரும் கணித்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் கபில் தலைமையிலான இந்திய அணி சாதனை படைத்தது.

அதில் 1983 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 60 ஓவர் முடிவில் 213 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. கபில்தேவ் மூன்று விக்கெட்டுகளை சாய்த்தார். அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்து போன்ற அணிக்கு எதிராக 214 ரன்கள் அடிப்பதெல்லாம் முடியாத காரியமாகவே கருதப்பட்டது.
எனினும் இந்திய அணி வீரர்கள் அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார்கள். கவாஸ்கர்,ஸ்ரீகாந்த் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது. இருவரும் அடுத்தடுத்து வெளியேற மகேந்திர் அமர்நாத், யாஸ்பால் ஷர்மாவும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
எனினும் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அப்போது இருந்தவர் சந்தீப் பாட்டில் தான். 1983 ஆம் ஆண்டிலேயே 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் எட்டு பவுண்டரிகள் அடங்கும். அப்போது மைதானத்தில் ரசிகர்கள் அடிக்கடி உள்ளே நுழைந்து சேட்டை செய்வார்கள். இதனால் பாதுகாப்பு குறைபாடுகள் நிறைய இருந்தது. மேலும் இந்தியா பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக பைனலுக்கு செல்கிறது என்றால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா என்ன?

இதன் காரணமாக கேப்டன் பாப் வில்லிஸ் ஒரு காரியம் செய்தார். அதன்படி ஆட்டம் முடிந்தவுடன் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கு ஏதுவாக இங்கிலாந்து வீரர்கள் அனைவரையும் மைதானத்தின் ஒரே பகுதிக்கு கொண்டு வந்தார். இதனால் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சந்திப் பாட்டில் அணியின் வெற்றியை உறுதி செய்தார். மேலும் பந்து அடித்த உடனே ரசிகர்கள் மைதானத்திற்குள் வர வீரர்கள் அனைவரும் ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி ஓடி விட்டார்கள். கிரிக்கெட் வரலாற்றிலேயே நாம் தோற்று விடுவோம் என்று தெரிந்து எதிரணிக்கு ரன் அடிக்க ஏதுவாக பில்டிங் நிற்க வைத்தது இந்த ஒரு போட்டியில் தான்.