லண்டன்: 2021ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து மிரட்டிய சம்பவம் பற்றி பார்க்கலாம்.
2021, ஆகஸ்ட் 15.. லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களுடன் ஆட்டத்தை நிறைவு செய்திருந்தது. இதனால் 5ஆம் நாளில் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து வெற்றிபெறும் என்றே ரசிகர்கள் கருதி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஆண்டர்சனை வம்புக்கு இழுத்த பும்ராவுக்கு பதிலடி கொடுக்கவும் இங்கிலாந்து அணி தயாராக இருந்தது.

சரியாக பும்ரா களத்திற்கு வர பவுன்சரி பந்துகளால் இங்கிலாந்து தாக்கும் திட்டத்தை அரங்கேற்றியது. ஆனால் உடனடியாக மோதலுக்கு தயாரான பும்ரா உடனடியாக சிக்சரும் பவுண்டரியுமாய் வெளுத்து கட்டினார். சக நண்பனை வம்புக்கு இழுத்த இங்கிலாந்து பவுலர்களை மறுமுனையில் இருந்து பொளந்து கட்டினார் ஷமி. இதன் விளைவாக இருவரும் இணைந்து 72 பந்துகளில் 50 ரன்களை எடுத்துவிட்டனர். உணவு இடைவேளைக்கு முன் ஷமி அரைசதம் அடித்து ஆர்ப்பரிக்க, ஒட்டுமொத்த இந்திய அணியின் லார்ட்ஸ் பால்கனியில் அணிவகுத்து ஆர்ப்பரித்தனர்.
உணவு இடைவேளையின் போது இந்திய அணி வெற்றிக்காக டிக்ளேர் செய்யும் என்று இங்கிலாந்து அணி காத்திருந்தது. ஆனால் கேப்டன் விராட் கோலி பாய்வதற்காக காத்திருந்தார். இங்கிலாந்து அணி திட்டமிடுவதற்கு நேரம் கொடுக்க கூடாது என்பதற்காக மீண்டும் ஷமி - பும்ராவை களமிறக்கினார். இங்கிலாந்து ரசிகர்களே மிரண்டு போயினர். விராட் கோலி மனதில் என்ன திட்டமிருக்கிறது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. வெறும் 2 ஓவர்கள் மட்டும் பேட்டிங் செய்ய அனுப்பி வைத்துவிட்டு, உடனடியாக டிக்ளேர் செய்தார் விராட் கோலி.
இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அணி ஆட்டத்தை டிரா செய்வதற்கு வெறும் 60 ஓவர்கள் பேட்டிங் செய்தாலே போதும் என்ற நிலை இருந்தது. இதனால் இந்திய அணியால் வெற்றிபெற முடியாது என்றே ரசிகர்கள் டிவி முன் அமர்ந்திருந்தனர். ஆனால் விராட் கோலி களமிறங்கும் போது வீரர்களுடன் களத்தில் ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனையில் விராட் கோலி பேசிய வார்த்தைகள் இவைதான்: அடுத்த 60 ஓவர்கள் இங்கிலாந்து அணிக்காக களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் நரகத்தை பார்க்க வேண்டும்.
உண்மையில் அன்று இந்திய அணியின் 11 வீரர்களும் விராட் கோலியாகவே இருந்தனர். ஒவ்வொரு பந்திற்கும் பரபரப்பு, ஒவ்வொரு பந்திற்கும் ஸ்லெட்ஜிங் என்று இந்திய அணியினர் இங்கிலாந்து அணிக்கு பயத்தை விதைத்துக் கொண்டே இருந்தனர். கண்ணை மூடி திறப்பதற்குள் 67 ரன்களுக்குள் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிராஜின் வேகத்தில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
ஆட்டம் 50 ஓவர்களை கடந்த போது டிராவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பும்ராவும் சிராஜும் இந்திய அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர். அதிலும் ஆண்டர்சனுக்கு வீசிய கடைசி பந்தில் போல்டானால் அப்படியே சிலையாகி நிற்பார். அதனை கண்டுகொள்ளாமல் சிராஜ் நேரடியாக சென்று ஸ்டம்பை எடுத்து சென்ற சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் யாராலும் மறக்க முடியாத சம்பவம். அன்று நாளில் ஷமியும், பும்ராவும் பேட்டிங் செய்துவிட்டு ஓய்வறை நோக்கி வந்த போது, இந்திய வீரர்கள் அனைவரும் ஓய்வறையில் வெளியில் இருந்து கைதட்டி சென்றனர்.
அதில் கூட விராட் கோலியின் பங்கு அதிகமாக இருந்தது. அப்போது ஒவ்வொரு இந்திய வீரரிடம் விராட் கோலி, நான் இப்போது பும்ரா - ஷமிக்கு கொடுக்கும் வரவேற்பு அடுத்த 100 ஆண்டுகளுக்கு லார்ட்ஸ் பால்கனியில் எதிரொலிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கிரிக்கெட்டின் மெக்கா என்று கொண்டாடப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி இந்திய அணியை சிங்கம் போல் வழிநடத்தி மறக்க முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்த நாள் இன்று!