பர்மிங்காம் : இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஐசிசி கோப்பையை வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் ஆகிறது. இந்திய அணி கடைசியாக தோனி தலைமையில் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
அதன் பிறகு ஒரு முறை கூட இந்திய அணி ஐசிசி தொடரில் கோப்பையை வென்றதில்லை. இந்த நிலையில் தோனியால் எப்படி இதனை சாதிக்க முடிந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வென்றது. எனினும் சொந்த மண்ணில் நடைபெற்றதால் தான் சுழற்பந்து வீச்சை வைத்து இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்று விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் ஷேவாக், சச்சின், கம்பீர் யுவராஜ் போன்ற ஜாம்பவான்கள் யாரும் இல்லாத நிலையில் இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் களம் இறங்கியது.
இதில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகிய வீரர்களை வைத்து தோனி களமிறங்கினார். இந்த தொடருக்கு முன்பு வரை ரோகித் சர்மா நடு வரிசையில் தான் விளையாடி வந்தார். ஆனால் தோனி முதல்முறையாக அவருக்கு தொடக்க வீரராக களம் இறங்க இந்த தொடரில் வாய்ப்பு கொடுத்தார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது சரித்திரமே. இளம் வீரர்கள் மீது தோனி வைத்த நம்பிக்கை அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் விராட் கோலியும் டாப் 3 இடங்களில் அதிக ரன்களை குவித்து இந்திய அணிக்கு பல நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள். நடு வரிசையில் தினேஷ் கார்த்திக், ரெய்னா, தோனி ஆகியோரும் பக்கபலமாக இருந்தார்கள்.

இதேபோன்று இங்கிலாந்தில் அனைவரும் நான்கு வேக பந்துவீச்சாளர்கள் வைத்து களமிறங்கிய நிலையில் தோனி மட்டும் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. புவனேஸ்வர் குமாரின் அபாரமான ஸ்விங் பந்துவீச்சும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோரின் வேகப்பந்து வீச்சும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாமல் இறுதிப்போட்டி வரை வந்தது. பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை இங்கிலாந்து ஆகிய அணிகளை இந்த தொடரில் இந்தியா வீழ்த்தியது. அதுவும் ஜூன் 23ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் மழை காரணமாக 20 ஓவர் ஆட்டமாக நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 129 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தோனி கடுமையான செக்குகளை வைத்தார். சூழல் நமக்கு எதிராக இருந்தாலும் நம்பிக்கையையும் விடாமுயற்சியும் கைவிடக்கூடாது என்பதற்கு தோனி அன்று எடுத்துக்காட்டாக அமைந்தார். மழை பெய்த நிலையிலும் ஜடேஜா, அஸ்வினை முழுமையாக நம்பி தோனி அவர்களுக்கு முழு ஓவர்களையும் வழங்கினார்.

மேலும் சுரேஷ் ரெய்னாவுக்கும் தோனி மூன்று ஓவர்கள் வழங்கினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணி 124 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இதனை அடுத்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை வென்றது.
சீனியர்கள் யாரும் இல்லாத நிலையில் இளம் வீரர்கள் மீது நம்பிக்கை மற்றும் ரோகித் சர்மாவுக்கு தொடக்க வீரர் வாய்ப்பு இங்கிலாந்து மண்ணில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் என்று பல முயற்சியை தோனி எடுத்ததாலே அந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆனால் அதன் பிறகு வந்த எந்த கேப்டனும் அப்படி ஒரு தைரியமான முடிவை எடுப்பதில்லை.