டெல்லி: மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய சட்டம், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் விளையாட்டுத் துறையில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சட்டம் ஆன்லைன் விளையாட்டு எனப்படும் ரம்மி, ட்ரீம் 11 போன்றவற்றுக்கு தான் என்றாலும் அடுத்தகட்டமாக இது கிரிக்கெட், கபடி, ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுத் தொடர்களை பெரிய அளவில் பாதிக்க உள்ளது. மேலும், 30,000 வேலைவாய்ப்புக்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
திறமை அடிப்படையிலான விளையாட்டுகள் உட்பட, பணம் வைத்து விளையாடப்படும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 'ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025' இயற்றப்பட உள்ளது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் இந்தத் துறையையே முற்றிலுமாக முடக்கிவிடும் என்று நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. இந்தத் தடை அமலுக்கு வந்தால், பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பதுடன், பல நூறு நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தடையால் ஏற்படக்கூடிய உடனடி மற்றும் மிக மோசமான பாதிப்பு, வேலைவாய்ப்பில்தான் இருக்கும் என அஞ்சப்படுகிறது. இந்தத் துறையில் நேரடியாகப் பணியாற்றும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட திறமையான ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கும் அபாயம் உள்ளது.
மேலும், இந்தத் தடையின் விளைவாக, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 300-க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தங்கள் கதவுகளை நிரந்தரமாக மூட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் என்று தொழில்துறை வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. இது, நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
அதே சமயம், இந்த விளையாட்டில் தங்கள் சேமிப்பை இழந்து, கடன் வாங்கி மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் இது துறை ரீதியான, டிஜிட்டல் வளர்ச்சி ரீதியான பின்னடைவை ஏற்படுத்தினாலும் நன்மைகளும் உள்ளன. அதே சமயம், விளையாட்டுத் துறைக்கு ஏற்படப் போகும் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இந்தத் தடையின் தாக்கம் ஆன்லைன் விளையாட்டுத் துறையோடு மட்டும் நிற்கப்போவதில்லை. இது, இந்திய விளையாட்டுத் துறையின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது. இன்று இந்தியாவில் நடைபெறும் பல விளையாட்டு லீக் போட்டிகளுக்கு, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள்தான் முக்கிய ஸ்பான்சர்களாக உள்ளன.
இந்தத் தடை அமல்படுத்தப்பட்டால், நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஃபிரான்சைஸ் விளையாட்டு லீக்குகளில் சுமார் 50% மூடப்படலாம். இதனால், விளையாட்டு அணிகள் மற்றும் லீக் போட்டிகளுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் 30 முதல் 40 சதவீதம் வரை குறையும்.
குறிப்பாக, கிரிக்கெட் அல்லாத கால்பந்து, கபடி, ஹாக்கி போன்ற மற்ற விளையாட்டுகளும், அடிமட்ட அளவில் உள்ள விளையாட்டுப் போட்டிகளும் தீவிரமாகப் பாதிக்கப்படும். இந்த விளையாட்டுகளுக்கு நிதி அளிக்கும் முக்கிய விளம்பரதாரர்களாக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் இருப்பதால், அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த விளையாட்டுகள் நிதி நெருக்கடியில் சிக்கி, முற்றிலுமாக நிலைகுலைந்து போகும் அபாயம் உள்ளது.
பொருளாதார ரீதியாகவும் இது ஒரு மிகப்பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. 'லூமிகை' என்ற நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்திய ஆன்லைன் விளையாட்டுச் சந்தையின் தற்போதைய மதிப்பு 3.8 பில்லியன் (சுமார் 31,540 கோடி ரூபாய்) ஆகும். இது, 2029-ம் ஆண்டுக்குள் 9.2 பில்லியன் (சுமார் 76,360 கோடி ரூபாய்) என்ற பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்தத் துறையில் தற்போது 1,30,000-க்கும் மேற்பட்ட திறமையான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அரசின் இந்தத் தடை மசோதா, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு துறையை அழித்து, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன.