
ஆன்-லைன் அமர்வுக்கு ஏற்பாடு
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரர்களின் பன்முகத் திறமைகளை மேம்படுத்தும் வகையில், அங்கு கடந்த 27ம் தேதி முதல் இரண்டு வாரங்களுககு ஆன்-லைன் அமர்வுகளுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது.

ஆன்லைனில் அறிவுரை
பல்வேறு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களால், தற்போதைய இளம் வீரர்களுக்கு பேட்டிங், பௌலிங், விக்கெட் கீப்பிங் உள்ளிட்டவற்றில் பல்வேறு விதமான நுணுக்கங்கள் இந்த அமர்வுகளில் வழங்கப்பட்டன. ஆன்லைனில் நடத்தப்பட்ட இந்த வகுப்புகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஜாவித் மியான்டட், வாசிம் அக்ரம், ரஷித் லதிப், முஸ்தாக் அகமது, முகமது யூனஸ், மொயின் கான், யூனஸ் கான் மற்றும் சோயிப் அக்தர் போன்றவர்கள் உரையாற்றினர்.

பாபர் அசாம் மகிழ்ச்சி
இந்த ஆன்லைன் அமர்வுகள் மூலம் வீரர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் முன்னாள் வீரர்கள் முகமது யூசுப் மற்றும் யூனஸ் கான் போன்றவர்களை எடுத்துக்காட்டாக கொண்டு தான் விளையாடி வருவதாகவும், அவர்களின் கிரிக்கெட் குறித்த ஆலோசனைகளை கேட்டது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தலைமை கோச்
இந்த அமர்வுகளில் உரையாற்றிய முன்னாள் வீரர்களுக்கு பாகிஸ்தான் தலைமை கோச் மற்றும் தேர்வாளர் மிஸ்பா உல் ஹக் நன்றி தெரிவித்துக் கொண்டார். அவர்களின் உரை, அணியில் உள்ள வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறியுள்ள அவர், அதுவும் இந்த நெருக்கடி மற்றும் சவாலான நேரத்தில் இந்த அறிவுரைகள் அவர்களுக்கு மிகுந்த பலனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டிப்ஸ் பலனளிக்கும்
இந்த அமர்வில் 45 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, இந்த அமர்வில் பேசிய மொயின் கான் மற்றும் ரஷீத் லத்தீப் போன்ற விக்கெட் கீப்பர்கள் தனது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான சர்பராஸ் அகமது கூறியுள்ளார். விக்கெட் கீப்பிங்கில் உயரத்தில் உள்ள அவர்களது டிப்ஸ் மிகுந்த பலனளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











