கொல்கத்தா: கொல்கத்தாவில் நாளை நடைபெற உள்ள 8வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழாவுக்கு மொத்தம் 30 ஆயிரம் டிக்கெட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
8-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற நாளை மறுநாள் தொடங்கி மே 24-ந்தேதி வரை நடக்கிறது. ஐ.பி.எல். தொடக்க விழா நாளை கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் பாலிவுட் நட்சத்திரங்களாக ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா, ஷாகித் கபூர் ஆகியோர் நடனம் ஆடுகின்றனர். இரவு 7.30 மணிக்கு தொடங்கி 2 மணி நேரம் விழா நடைபெறுகிறது.

அப்போது 8 அணிகளின் கேப்டன்களும் மேடையில் தோன்றுகிறார்கள். ஐ.பி.எல். தொடக்க விழாவுக்கு குறைந்த அளவாக 30 ஆயிரம் டிக்கெட்கள் மட்டுமே விற்பனைக்கு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க இணை செயலாளர் சுபீர் கங்கலி கூறுகையில், ஐ.பி.எல். தொடக்க விழாவுக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதனால் தொடக்க விழா மேடைக்கு அருகிலேயே அனைவரும் அமரும் வகையில் இருக்கும் என்றார்.
தொடக்க விழா டிக்கெட்டுகள் ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது காலை 11 மணி முதல் இரவு 7 மணிவரை மைதானத்தில் வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.