
விலகும் கில்
இந்த தொடர் தொடங்க இன்னும் 5 வார காலம் இருக்கும் நிலையில் இந்திய அணியின் ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய காயத்தின் தன்மை அதிகமாக இருந்தால் ஒட்டுமொத்த தொடரில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கு காயம்?
ஆஸ்திரேலிய தொடரில் ஓப்பனராக சிறப்பாக செயல்பட்ட சுப்மன் கில், அதன் பிறகு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என இந்திய அணியின் ஓப்பனிங்கிற்கு முதல் தேர்வாக திகழ்கிறார். ஆனால் தற்போது அவருக்கு உடலில் சில உள் காயங்கள் இருப்பதாகவும், அவர் தொடர்ந்து விளையாடுவது காயத்தை தீவிரப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்கு காயம், எப்படி காயம் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நிலைமை என்ன?
தற்போதைய சூழலுக்கு சுப்மன் கில் இந்திய அணியுடன் தான் இருக்கவுள்ளார். இங்கிலாந்திலேயே முதற்கட்ட சிகிச்சை வழங்கப்படவுள்ளதாகவும், டெஸ்ட் தொடர் தொடங்கிய பிறகு இந்தியாவுக்கு திரும்ப அழைக்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கில் இடத்திற்கு யார்?
சுப்மன் கில் இல்லை என்பதால் இந்திய அணிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட போவதில்லை. ஏனென்றால் இந்திய அணியில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் ஓப்பனிங் களமிறங்க காத்துள்ளனர். கே.எல்.ராகுலை விட மயங்க் அகர்வாலுக்கு அயல்நாட்டு களங்களில் அனுபவம் இருப்பதால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications