அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அர்ஜித் சிங் உள்ளிட்ட பிரபல கலைஞர்கள் இந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் கலை நிகழ்ச்சி நடத்துவது ஏன் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாகிஸ்தானுக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவத்தை பிசிசிஐ அளிக்கிறது என ரசிகர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினார்கள்.

குறிப்பாக பாஜகவை சேர்ந்த ஒரு தரப்பினர் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பு வரவேற்பு தருவது பாகிஸ்தான் அணிக்கு அதீத முக்கியத்துவத்தை கொடுப்பது ஆகியவற்றுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த நிலையில் இதனால் பிசிசிஐ ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அதன்படி இன்று நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் மைதானத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும்தான் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த கலை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பார்க்க முடியாது என்றும் பி சி சி ஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் இந்த கலை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் காட்ட மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவிட்டு அதனை மைதானத்தில் அமர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும்தான் என பிசிசிஐ அறிவித்திருப்பது சாதாரண ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தொடக்க நிகழ்ச்சிகளை நடத்துவதே தவறு என்று கூறி வந்த நிலையில் தற்போது அது மைதானத்தில் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டும்தான் என்று கூறுவது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்று மோசமான முடிவுகளை பிசிசிஐ தொடர்ந்து எடுப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பாஜகவின் ஒரு தரப்பினர் தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எந்த அளவுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்திருக்கிறோம் என்பதை தொலைக்காட்சிகள் காட்டினால் அது மேலும் அவர்களை கோபப்படுத்தும் என்பதற்காக இந்த முடிவை ஜெய்ஷா எடுத்து இருக்கலாம் என தெரிகிறது.