கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அதிரடி காட்டிய பஞ்சாப் வீரர் கிறிஸ் கெயில், இந்த சீசனில் 229 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தோருக்கான ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த சீசனின் 18வது ஆட்டத்தில் கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் விளையாடின. இதில் பஞ்சாப் 9 விக்கெட் வித்தியாசத்தி்ல் வென்றது. லோகேஷ் ராகுல் 60 ரன்களும், கிறிஸ் கெயில் 62 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை கிறிஸ் கெயில் பிடித்துள்ளார். அவர் 3 போட்டிகளில் 229 ரன்கள் சேர்த்துள்ளார். லோகேஷ் ராகுல் 213 ரன்களுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த பெங்களூருவின் விராட் கோஹ்லி 201 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலத்தின் போது, இரண்டு சுற்றுகள் வரை ஏலம் எடுக்கப்படாமல் புறக்கணிக்கப்படவர் கெயில். கடைசியாக அவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. ஆனால் முதல் இரண்டு ஆட்டங்களில் அவர் களமிறக்கப்படவில்லை. அதன்பிறகு களமிறங்கிய மூன்று ஆட்டங்களில் ஒரு சதம், இரண்டு அரை சதங்கள் அடித்துள்ளார்.
229 ரன்கள் எடுத்தார்
சிஎஸ்கேவுக்கு எதிராக 33 பந்துகளில் 7 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் அடித்தார் கெயில். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 பந்துகளில் ஒரு பவுண்டரி, 11 சிக்சர்களுடன் 104 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனின் முதல் சதம் இதுவாகும்.
இன்று நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2011ல் 12 ஆட்டங்களில் 608 ரன்களுடனும், 2012ல் 15 ஆட்டங்களில் 733 ரன்களுடனும் ஆரஞ்ச் கேப்பை வென்றவர் கெயில். பஞ்சாப் அணி லீக் சுற்றில் இன்னும் 9 ஆட்டங்களில் விளையாட உள்ளது.