குயானா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா விமர்சித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி திலக் வர்மாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடர்ச்சியாக 2 டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். இந்திய அணியின் தோல்விக்கு வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் பூரனின் அதிரடி ஆட்டம் காரணமாக அமைந்தது. சிறப்பாக ஆடிய பூரன், 40 பந்துகளில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 67 ரன்கள் விளாசி அசத்தினார்.
இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் எங்கள் அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லை. நிச்சயமாக இந்த பிட்சில் 170 ரன்கள் சிறந்த இலக்காக இருந்திருக்கும். நிக்கோலஸ் பூரனின் அதிரடியான பேட்டிங் நாங்கள் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியாத அளவிற்கு தள்ளப்பட்டோம். 2 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த போதும், அதிரடியான ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் ஆட்டத்தை மாற்றினார்.
தற்போது உள்ள இந்திய அணியின் பேட்டிங் காம்பினேஷனில் டாப் 7 பேட்டர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். சிறந்த இலக்கை அளித்தால் பவுலர்கள் வெற்றியை கொடுப்பார்கள். பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். திலக் வர்மாவை பொறுத்தவரை அவர் 2வது சர்வதேச போட்டியில் விளையாடியதை போலவே இல்லை. இது கற்றுக் கொள்வதற்கான நேரமென்று நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.