
காயமடைந்த இலங்கை வீரர்கள்
கடந்த 2009ல் இலங்கை அணியினர் பாகிஸ்தானில் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது லாகூரில் உள்ள கடாபி மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற பேருந்தை இடைமறித்து தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இலங்கை வீரர்கள் சிலர் காயமடைந்தனர். மேலும் 8 பேர் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு குறைபாடு
இந்த சம்பவத்தை தற்போது குமார சங்ககாரா நினைவு கூர்ந்துள்ளார். பாகிஸ்தானிற்கு தாங்கள் பயணம் மேற்கொண்டபோது, அங்கு பாதுகாப்பு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்ததாக சங்ககாரா குறிப்பிட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பௌலர் ஒருவர், இங்கு குண்டு வெடிக்கும் என்று தான் கருதுவதாகவும் மீண்டும் இலங்கைக்கே சென்றுவிடலாம் என்றும் தெரிவித்தார். அவர் இதைக் கூறிய 20 நிமிடங்களில் தங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சங்ககாரா குறிப்பிட்டுள்ளார்.

பேருந்தின் அடியில் படுத்து தப்பினோம்
தங்களது பேருந்தை இடைமறித்து துப்பாக்கி சூட்டில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக கூறிய சங்ககாரா, முதலில் அது பட்டாசு வெடிக்கும் சத்தம் என்றே தாங்கள் கருதியதாகவும், ஆனால் பேருந்தில் முன்சீட்டில் இருந்த திலகரத்னே கூறிய பின்பே உண்மை நிலை தங்களுக்கு தெரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து பேருந்தின் அடியில் தாங்கள் ஒருவர்மீது ஒருவர் படுத்துக் கொண்டு தப்பியதாகவும் அவர் கூறினார்.

ரியல் ஹீரோ பேருந்து ஓட்டுநர்
இந்த துப்பாக்கிச்சூட்டில் தங்களது பாதுகாவலர்கள் அனைவரும் உயிரிழந்ததாகவும், ஆனால் பேருந்து ஓட்டுநர், மயிரிழையில் உயிர் தப்பியதாகவும், அவர் உடனடியாக சமயோசிதமாக செயல்பட்டு, பேருந்தை மைதானத்தை நோக்கி செலுத்தியதாகவும், வழக்கமாக குறுகிய அதன் கேட்டை கடக்க 4 முறை அவர் முயற்சிப்பார் என்றும், ஆனால் அந்த சமயத்தில் உடனடியாக மைதானத்தை சென்றடைந்ததாகவும், அவர்சிறப்பாக ரியல் ஹீரோவாக செயல்பட்டு தங்களை பாதுகாத்ததாகவும் சங்ககாரா மேலும் கூறினார்.

மற்ற நாடுகளுக்கு கோரிக்கை
பாகிஸ்தானில் இந்த தாக்குதலுக்கு ஆளான இலங்கை அணியினர், 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் அங்கு டெஸ்ட் தொடரில் பங்கேற்றனர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த நாடும் முன்வரவில்லை என்ற நிலையில் இலங்கை அணியினர் இந்த சுற்றுப்பயணத்தை கடந்த ஆண்டில் மேற்கொண்டனர். மேலும் சங்ககாரா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications











