இந்திய திறமைகளை பயன்படுத்த வேண்டும்
ஐபிஎல் 2020 தொடருக்காக இந்திய அணிகள் தயாராகி வருகின்றன. வரும் 19ம் தேதி இதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல்லில் வீரர்களை பயிற்றுவிக்க இந்திய திறமைகளை பயன்படுத்த வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.
டிராவிட்டை தொடர்ந்து அசாருதீன்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், ஐபிஎல்லில் இந்திய முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தற்போது அவரை தொடர்ந்து அசாருதீனும் குரல் கொடுத்துள்ளார்.
தலைமை பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்
ஐபிஎல் அணிகள் நமது முன்னாள் வீரர்களுக்கு மதிப்பளித்து, அவர்களை தலைமை பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும் என்று அசாருதீன் கேட்டுக் கொண்டுள்ளார்.
"காத்திருந்து பார்க்கலாம்"
மற்றவர்களை விட நமது முன்னாள் வீரர்கள் மிகுந்த திறமை வாய்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ள அசாருதீன் இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நடந்த பிசிசிஐயின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் முறையான கோரிக்கையை அளித்துள்ளார். மேலும் ஐபிஎல் கவுன்சிலின் கவனத்திற்கும் இந்த விவகாரத்தை கொண்டு சென்றுள்ள அவர், அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
நமது வீரர்கள் பயனடைய வேண்டும்
வெளிநாட்டு வீரர்கள் பலனடைவதால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ள அசாருதீன், ஆனால் திறமை மிக்க நமது வீரர்களும் பலனடைய வேண்டும் என்றும் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
தொடர வேண்டும் என கோரிக்கை
ஐபிஎல் பயிற்சியாளர்களாக டிராவிட், கும்ப்ளே மட்டுமின்றி, வீரேந்திர ஷேவாக், லால்சந்த் ராஜ்புத் போன்றவர்கள் அணிகளை வழிநடத்தி சென்றுள்ளனர். கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு ஷேவாக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ராஜ்புத்தும் பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர். இது தொடர வேண்டும் என்பதே அசாருதீனின் கோரிக்கை.