லக்னோ: உலகக்கோப்பை தொடரில் கடந்த இரு போட்டிகளில் தோல்வியடைந்த போது வந்த விமர்சனங்கள் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி தொடங்கிய போது நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்களிடையே கணிக்கப்பட்டது. ஏனென்றால் ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலிய அணி பீஸ்ட்டாக மாறிவிடும். ஆனால் நடப்பு உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியிடமும், இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியிடமும் ஆஸ்திரேலியா வீழ்ந்தது.

இதனால் என்னடா இது 5 முறை சாம்பியனுக்கு வந்த சோதனை என்று ஆஸ்திரேலிய அணியை ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியை 209 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறினாலும், 35.2 ஒவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியை பெற்று அசத்தியது. சிறப்பாக ஆடிய இங்லிஸ் 58 ரன்களும், மிட்செல் மார்ஷ் 52 ரன்களும் விளாசினர். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை ஆஸ்திரேலிய அணி பதிவு செய்துள்ளது. அதேபோல் புள்ளிப் பட்டியலிலும் ஆஸ்திரேலியா 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்த போது நான் பெரிதாக எதையும் கூறவில்லை. இன்றைய ஆட்டத்தில் எங்களின் வீரர்களின் எனர்ஜியை பார்க்க அற்புதமாக இருந்தது. இலங்கை அணியினர் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆனால் நாங்கள் நல்ல விதமாக பந்துவீசினோம் என்றே நினைக்கிறேன்.
எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்வதற்கு கடினமான லெந்தில் தொடர்ந்து பந்துவீசினார்கள். இந்த ஆடுகளத்தில் 300 ரன்கள் என்பது சவாலானதாக இருந்திருக்கும். எங்களை ஏராளமான தீவிரமாக பார்க்கிறார்கள் என்பதை அறிவோம். எங்களை பற்றி வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு காது கொடுக்க போவதில்லை. இன்றைய ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டோம். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.