இஷாந்த் ஷர்மாவின் உலக கோப்பை கனவு கலைந்தது.. காயத்தால் வெளியேறுகிறார்
பெர்த்: இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா மூட்டு காயத்தால் அவதிப்பட்டுவருவதால், உலக கோப்பை போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் மற்றும் அதற்கு முன்பாக நடந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஆகியவற்றில் ஒரு போட்டியில் கூட இந்தியாவெற்றி பெறவில்லை. இந்நிலையில், உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயமடைந்துள்ளது இந்திய அணி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வலைப்பயிற்சியில் இஷாந்த் ஈடுபட்டபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இஷாந்த் ஷர்மா கடந்த மாதம் 26ம்தேதி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் பங்கேற்றார். ஆனால் மழை காரணமாக போட்டி பாதியில் கைவிடப்பட்டதால் அவருக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் இஷாந்த் விளையாடவில்லை.
உலக கோப்பைக்கான அணியில் இஷாந்த் இடம்பெற முடியாவிட்டால், அவர் இடத்திற்கு மற்றொரு ஷர்மா வரப்போகிறார். அவர்தான் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பந்து வீசிய மோஹித் ஷர்மா.
2011 உலக கோப்பை தொடங்கும் முன்பாக, 15 பேர் அணியில் இடம் பெற்றிருந்த பிரவீண்குமார் காயமடைந்தார். அவருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த கோப்பையை இந்தியா வென்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications