"வீராங்கனைகள்" குடும்பத்தில் "வாக்கப்பட"ப் போகும் இஷாந்த் சர்மா!
டெல்லி: இந்திய வேகப் பந்து வீச்சாளரும், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணியின் முக்கியப் பந்து வீச்சாளர்களில் ஒருவருமான இஷாந்த் சர்மாவுக்கும், காசியைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரதீமா சிங்குக்கும் திருமணம் முடிவாகியுள்ளது. நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
சமீப காலமாக அடுத்தடுத்து கிரிக்கெட் வீரர்கள் திருமண பந்தத்தில் இறங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இஷாந்த் சர்மாவும் இணைந்துள்ளார்.
இஷாந்த் சர்மா "வாக்கப்பட"ப் போகும் குடும்பம் விளையாட்டு வீராங்கனைகள் நிரம்பி வழியும் குடும்பமாகும். அதாவது பிரதீமா சிங்குக்கு நான்கு அக்காக்கள். நால்வருமே விளையாட்டு வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து சகோதரிகள்
வாரணாசியின் (காசி) ஷிவ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீமா சிங். இவரது குடும்பத்தில் மொத்தம் ஐந்து பெண்கள். அதில் கடைக் குட்டிதான் பிரதீமா சிங். ஐந்து பேருமே விளையாட்டு உலகில் உலவி வருபவர்கள்.

இந்திய அணி வீராங்கனை
2006ம் ஆண்டு முதல் பிரதீமா சிங் இந்திய அணிக்காக ஆடி வருகிறார். அந்த ஆண்டு அவர் இந்திய ஜூனியல் அணியில் சேர்க்கப்பட்டார். 2008ம் ஆண்டு கேப்டனானார். 2010ல் சீனியர் அணியில் இடம் பெற்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடியுள்ளார்.

மூத்த அக்கா ஹாக்கி பயிற்சியாளர்
இவரது மூத்த அக்கா பிரியங்கா சிங் தேசிய ஹாக்கி பயிற்சியாளர் ஆவார். 2வது அக்கா திவ்யா சிங் இந்திய கூடைப்பந்தாட்ட ஜூனியர் அணியின் பயிற்சியாளர் ஆவார். அடுத்த அக்காக்கள் பிரஷாந்தி மற்றும் அகான்ஷா சிங் ஆகியோரும் கூட இந்தியாவுக்காக விளையாடி வரும் வீராங்கனைகள்தான்.

நிச்சயதார்த்தம்
இஷாந்த் சர்மா - பிரதீமா சிங் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் டெல்லியில் நடந்தது.. இரு வீ்ட்டார் மட்டும் இதில் கலந்து கொண்டனர். இஷாந்த் சர்மாவுக்கு ரோஹித் சர்மா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications