இதுக்கெல்லாம் 4 ரன் தருவீங்களா??.. நடுவர்களிடம் முகமது சிராஜ் காரசார வாதம்.. வினையான விளையாட்டு!
ராஞ்சி: தென்னாப்பிரிக்கா உடனான 2வது ஒருநாள் போட்டியில் நடுவர்களுடன் முகமது சிராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இரு அணிகளும் மோதிய 2வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 278/7 ரன்களை குவிக்க, இந்திய அணி 45.5 ஓவர்களிலேயே 282/3 ரன்களை குவித்து வெற்றி கண்டது.

இந்திய அணி பவுலிங்
இந்திய அணியின் பவுலிங் சொதப்பலாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்த சூழலில் இந்த போட்டியில் பதிலடி கொடுக்கப்பட்டது. குறிப்பாக இளம் வீரர் முகமது சிராஜ் தரமான கம்பேக் கொடுத்தார். 10 ஓவர்களை வீசிய அவர் 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார்.

சர்ச்சை சம்பவம்
என்னதான் பவுலிங் சிறப்பாக இருந்தாலும், சிராஜுக்கு கள சூழல் சரியாக அமையவில்லை. ஆட்டத்தின் 48வது ஓவரின் போது முகமது சிராஜ் பந்துவீச, தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் ஸ்ட்ரைக்கில் இருந்தார். 2வது பந்தை மகாராஜ் அடிக்காமல் தவறவிட, கீப்பர் சஞ்சு சாம்சனிடம் பந்து சென்றது.

சிராஜ்ஜின் செயல்
இதனால் அனைவரும் சகஜமாக இருக்க, நான் ஸ்ட்ரைக்கில் இருந்த டேவிட் மில்லர் பேசுவதற்காக பாதி கிரீஸுக்கு வெளியே வந்தார். அப்போது திடீரென சஞ்சு சாம்சன் பந்தை சிராஜிடம் கொடுக்க, அவரும் சாதாரணமாக நான் ஸ்ட்ரைக்கர் ஸ்டம்ப்-ஐ நோக்கி வீசினார். அங்கு தடுப்பதற்கு ஒரு ஃபீல்டரும் இல்லை எனத்தெரிந்து தான் சகஜமாக தூக்கிப்போட்டார். ஆனால் பந்து மிஸ்ஸாகி பவுண்டரி எல்லைக்கு சென்றது.
ஓவர் த்ரோ
இதனை கண்ட கள நடுவர் உடனடியாக ஓவர் த்ரோ எனக்கூறி 4 ரன்களை கொடுக்க, சிராஜுக்கு கடும் கோபம் வந்துவிட்டது. நேராக நடுவரிடம் சென்ற சிராஜ், சகஜமாக டெட் பாலாக போட்டதை எப்படி ஓவர் த்ரோ எனக்கூறுவீரர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் நடுவில் வந்து சமாதானம் செய்து வைத்தார். ஒருவேளை பந்து ஸ்டம்பில் பட்டிருந்தால் மில்லர் அவுட்டாகியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications