டெல்லி: 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாட்டு பிரிவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் பி ஆர் ஸ்ரீஜேஷ்-க்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு துறையில் மொத்தம் ஐந்து விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ஒரு பத்ம பூஷன் மற்றும் நான்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அடங்கும்.
பி ஆர் ஸ்ரீஜேஷ், கேரளா - பத்ம பூஷன்
ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழ்நாடு - பத்மஸ்ரீ
ஹர்விந்தர் சிங், ஹரியானா - பத்மஸ்ரீ
இனிவளப்பில் மணி விஜயன், கேரளா - பத்மஸ்ரீ
சத்யபால் சிங், உத்தர பிரதேசம் - பத்மஸ்ரீ

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று இருந்தது. அதற்கு முக்கிய காரணமான அணியின் மூத்த வீரரான கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வையும் அறிவித்து இருந்தார்.
அதற்கு முன் 2021 டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலும் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதில் ஸ்ரீஜேஷ்-இன் பங்கு இருந்தது. இந்தியா ஹாக்கி அணியின் ஜாம்பவானாக அவர் ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு 500 டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆண்டின் இறுதியில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டு உள்ளது.
ஹரியானாவின் ஹர்விந்தர் சிங் 2024 பாரிஸ் பாராலிம்பிக் தொடரில் ஆடவர் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட உள்ளது.
இந்திய கால்பந்து விளையாட்டு ஜாம்பவான்களில் ஒருவரான கேரளாவின் மணி விஜயனை கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்க்கப்பட்டு உள்ளது. அவர் 2000 முதல் 2004 ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர். 72 சர்வதேச போட்டிகளில் விளையாடி 29 கோல்களை அடித்து இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த சத்யபால் சிங் பாரா விளையாட்டு பயிற்சியாளர் ஆவார். 2012இல் துரோணாச்சாரியார் விருது வென்றார். இளம் வயதில் அந்த விருதை வென்று சாதனை படைத்து இருந்தார். பாரா விளையாட்டு வீரர் பிரவீன் குமார் இரண்டு பாராலிம்பிக் பதக்கங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.