ஏமாற்றிய ஹீரோக்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்த அளவு இல்லை. ரோஹித் முதல் ஜடேஜா வரை யாருமே இந்தியாவை சரிவில் இருந்து மீட்க போராடியதாக தெரியவில்லை. ஒரு பேட்ஸ்மேன் கூட போராடவில்லை என்பதே இங்கு வேதனையான விஷயம். இப்படி விளையாடுவதற்காகவா, இவ்வளவு சிரமப்பட்டு இறுதிப் போட்டி வரை முன்னேறினார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட்டால் கூட, தேவைப்பட்ட நேரத்தில் ரன்களை குவிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அவரால் இறுதிக்கட்டத்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.
பெரும் பின்னடைவு
குறிப்பாக, புஜாரா, ஷுப்மன் கில், ரோஹித் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் நிலை குறித்து ஆராய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
நிறைவேறிய கனவு
எனினும், உலகக் கோப்பை டைட்டிலை வசமாக்க முடியாமல் பல ஆண்டுகளாக திண்டாடிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. ஒவ்வொரு சீஸனிலும், ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும், அரையிறுதி அல்லது இறுதி வரை முன்னேறி தோற்பது தான் இத்தனை ஆண்டுகாலமாக நியூசிலாந்தின் அமைப்பாக இருந்து வந்தது. குறிப்பாக, 2019 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், மேட்ச் டிராவாகி, இரண்டு முறை நடைபெற்ற சூப்பர் ஓவரும் டிராவாகி, இங்கிலாந்திடம் கோப்பையை நியூசிலாந்து பறிகொடுத்தது. இப்படி பலகட்ட சோதனைகளுக்கு பிறகு நியூசிலாந்து டெஸ்ட் கோப்பையை வென்றிருப்பதும் இன்று கொண்டாடப்பட வேண்டிய ஒன்றே.
மன்னிப்பு
இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை ஊதித்தள்ளி வெற்றிப் பெறும் என்று கணித்திருந்தார். இப்போது நியூசிலாந்து வெற்றிப் பெற்றிருக்கும் சூழலில், தனது இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார். கிரிக்கெட்டில், வெற்றி தோல்வியை கணித்ததற்கு மன்னிப்பா? என்று நமக்கு கேட்கத் தோன்றும். நியூசிலாந்து ரசிகர்கள், இவர் வெளியிட்ட கருத்து குறித்து சமூக தளங்களில் கார சாரமாக விமர்சனம் செய்ததால், இப்போது பெய்ன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
சிறப்பான ஆட்டம்
இதுகுறித்து அவர், "நாம் எல்லோரும் சற்று தவறாக கணித்துவிட்டோம். நியூசிலாந்து ரசிகர்களிடமிருந்து நான் சில விமர்சனங்களைப் பெற்றேன். அதனால் தான் இப்போது பதில் அளிக்கிறேன். நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடியதாக நான் நினைக்கிறேன். நான் எனது வார்த்தைகளை திரும்பப் பெறுகிறேன்" என்று கூறியுள்ளார்.