மெல்போர்ன்: கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களுமே சர்வதேச அளவில் மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் லத்தீப்.
சில போட்டிகளை சினிமா பாணியில் அவர்கள் பிக்ஸ் செய்கின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார் லத்தீப்.
1994ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் சிலர் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து கிரிக்கெட்டுக்கு அன்றே முழுக்குப் போட்டார் லத்தீப்.
தற்போது பாகிஸ்தான் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு சிக்கியுள்ளது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அனைத்து நாடுகளின் வீர்ரகளுமே இதுபோன்ற சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமே இதில் ஈடுபடுவவதாக கூறுவது தவறு. ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களும் இதில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு நாட்டு அணியும் சூதாட்டத்தில் ஈடுபடுகிறது என்பதை நான் அடித்துக் கூறுகிறேன்.
போட்டியை பிக்ஸ் செய்ய புத்திசாலித்தனமாக செயல்படுகின்றனர். சில போட்டிகளை, சினிமாவில் வருவது போல, அழகான, கதை, திரைக்கதையை வடிவமைத்து அரங்கேற்றுகின்றனர். ஒரு ஓவரில் எத்தனை ரன் எடுக்க வேண்டும். ஒரு இன்னிங்ஸில் எத்தனை ரன் சேர்க்க வேண்டும் என்பது முதல் பல்வேறு மட்டத்தில் இந்த பிக்ஸிங் நடைபெறுகிறது என்றார் லத்தீப்.