கராச்சி: ஆஸ்திரேலியாவுக்கு பாகிஸ்தான் அணி சென்றிருந்தபோது பெண்களுடன் பேசுவதிலேயே வீரர்கள் சிலர் குறியாக இருந்தனர். ஆட்டம் குறித்தோ, வெல்வதிலோ அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று பாகிஸ்தான் டுவென்டி 20 அணி கேப்டன் ஷாஹித் அப்ரிதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா சென்றிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான தோல்வியுடன் திரும்பி வந்தது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தோல்விக்கு மேட்ச் பிக்சிங்தான் முக்கிய காரணம் என தற்போது பலமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமான சிட்னி போட்டியில் பாகிஸ்தான் தோற்க அந்த அணியின் கம்ரான் அக்மல் முக்கிய காரணம் என்று அணி மேலாளர் இந்திகாப் ஆலம் கூறியுள்ளார். முக்கியமான போட்டிகளில் வேண்டும் என்றே அக்மல் அவுட் ஆனதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், டுவென்டி 20 அணியின் கேப்டன் அப்ரிதி ஒரு புதுக் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். ஆஸ்திரேலிய பயணத்தின்போது அணியின் சில வீரர்கள், விளையாடுவதை விட பெண் ரசிகைகளுக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருவதிலும், கடலை போடுவதிலுமே அதிக அக்கறை காட்டினர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
100 சதவீத கிரிக்கெட்டை அவர்கள் ஆடவில்லை என்றும் அப்ரிதி குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அப்ரிதியிடம் நடத்திய விசாரணை அடங்கிய வீடியோவில்தான் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரகசியமாக லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்ரிதி கூறுகையில், மேட்ச் பிக்சிங் குறித்து புகார்கள் வருகின்றன. இது கவலை தருகிறது. ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் சில வீரர்கள், முழுமையாக தங்களை ஆட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்லவில்லை. மாறாக பவுண்டரி லைனில் நின்றிருந்த பெண் ரசிகைகளுடன் பேசவும், ஆட்டோகிராப் போடுவதிலுமே ஆர்வம் காட்டினர்.
சிலர் குறிப்பிட்ட அளவுக்கு ரன்களை குவித்து விட்டு ஆட்டமிழந்த பின்னர் பெவிலியனில் உள்ள ரசிகைகளுடன் பேச ஓடியதைக் காண முடிந்தது என்று கூறியுள்ளார் அப்ரிதி.
அப்ரிதியின் புகார் அடங்கிய வீடியோ வெளியான விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.