லண்டன்: பாகிஸ்தான் நடிகையும், மேட்ச்பிக்ஸிங்கில் சிக்கியுள்ள பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப்பின் முன்னாள் காதலியுமான வீணா மாலிக், தன்னிடம் 7 பாகிஸ்தான் வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் மூலமாக மேட்ச் பிக்ஸிங் செய்ய உதவுமாறும் கோரினார் என்று இந்திய புகைப்படக் கலைஞர் தீரஜ் தீக்ஷித் கூறியுள்ளார்.பாகிஸ்தான் அணி மீண்டும் மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் என சிக்கியுள்ளது. இதில் பாகிஸ்தான் நடிகையான வீணாவின் பெயரும் தற்போது அடிபடுகிறது. இவர் ஆசிபின் முன்னாள் காதலியாவார். இவர் இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான தீரஜை ஒரு புக்கி என்று குற்றம் சாட்டியுள்ளார்.இதை தீரஜ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையில் மேட்ச் பிக்ஸிங் செய்ய உதவுமாறு கூறி என்னை அணுகியவர் வீணாதான். இது நடந்தது கடந்த ஆண்டு ஜனவரி மாதம். அப்போது நான் டாக்காவில் இருந்தேன். என்னைத் தொடர்பு கொண்ட வீணா, வங்கதேசத்துடனான டூரில் அனைத்துப் போட்டிகளையும் பிக்ஸ் செய்துள்ளோம் என்று கூறினார்.மேலும், என்னிடம் ஏழு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர். அவர்களது பெயரை இப்போது சொல்ல விரும்பவில்லை. உங்களுக்குத் தேவை என்றால் அவர்களை வைத்து டீல் பேசிக் கொள்ளலாம். ரிசல்ட்டுக்கு நான் கியாரண்டி என்றார்.இந்தியாவைச் சேர்ந்த எந்த புக்கியையாவது தெரியுமா என்றும் என்னிடம் கேட்டார் வீணா. அப்படி யாராவது இருந்தால் என்னிடம் அறிமுகப்படுத்துங்கள் என்றும் கூறினார்.நான் வீணாவை ஒரு முறை கூட நேரில் சந்தித்ததில்லை. அவர் என் முன் வந்து நின்றால் கூட என்னால் அவரை அடையாளம் காட்ட முடியாது என்றார் தீரஜ்.