லண்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ஜுல்கார்னைன் ஹைதர், லண்டனுக்கு ஓடி விட்டார். புக்கிகள் மிரட்டியதால் அவர் லண்டன் வந்துள்ளார். தனக்கு புகலிடம் கொடுக்குமாறு இங்கிலாந்து அரசிடம் அவர் விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளாராம்.
துபாயில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்கான ரன்னை ஹைதர்தான் அடித்தார்.
இந்தப் போட்டிக்குப் பின்னர் ஹைதருக்கு ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில் மிரட்டிய நபர், தென் ஆப்பிரிக்கா வெல்வதற்காக செய்து வைத்த ஏற்பாடுகளை ஹைதர் சீர்குலைத்து விட்டதாக கூறியுள்ளார். மேலும் இதன் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து தனது அணியின் மேலாளரை அணுகிய ஹைதர், மொபைல் போன் வாங்க வேண்டும், அதற்கு பாஸ்போர்ட் தேவை என்று கூறி தனது பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி நேராக விமான நிலையம் சென்று லண்டனுக்கு ஓடி விட்டார்.
ஹைதர் சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனதால் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பீதியடைந்தது. பரபரப்பும் ஏற்பட்டது.
திங்கள்கிழமை காலை லண்டன் வந்து சேர்ந்த ஹைதர் தனக்கு வந்த மிரட்டல் குறித்து பாகிஸ்தானின் ஜியோ டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,
நான் இங்கிலாந்து அரசிடம் புகலிடம் கோரப் போகிறேன். இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறேன்.
போட்டிக்கு முன்னர் என்னை அணுகிய ஒருவர், நான்காவது மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டிகள் பிக்ஸ் செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறும் கூறினார். ஆனால் நான் அதை மனதில் கொள்ளவில்லை. இதையடுத்தே எனக்கு மிரட்டல் வந்தது.
என்னை மிரட்டியது யார், எனது அணியில் பிக்ஸிங்கில் ஈடுபட்டது யார் என்பது குறித்து நான் சொல்ல விரும்பவில்லை. நான் எனது நாட்டை தாய் போல நினைக்கிறேன், எனது தாயை விற்க மாட்டேன், யாராவது அப்படிச் செய்வார்களா. எது எனக்குச் சரி என்று பட்டதோ அதையே நான் செய்தேன்.
அவர்கள் சொன்னபடி நடக்க எனக்குப் பிடிக்கவில்லை. இதனால்தான் இங்கு வந்து விட்டேன் என்று கூறியுள்ளார் ஹைதர்.
இதற்கிடையே ஹைதரின் லாகூர் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு ஹைதரின் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். அவர்களும் விரைவில் லண்டனுக்குப் போய் விடுவார்கள் என்று தெரிகிறது. அனைவரும் லண்டனுக்கு வந்து சேர்ந்த பின்னரே என்ன நடந்தது, யார் மிரட்டியது என்பதை ஹைதர் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே மேட்ச் பிக்ஸிங், ஸ்பாட் பிக்ஸிங் என சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். அந்த அணியின் கேப்டனாக இருந்த சல்மான் பட், முகம்மது ஆமிர், முகம்மது ஆசிப் ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கி சஸ்பென்ட் ஆகியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.