பலுசிஸ்தான் போராட்டம்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும், பலரை காணவில்லை என்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள், பாகிஸ்தானுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.
எங்கும் விளம்பரம்
ஆப்கானிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் இரண்டுமே பாகிஸ்தானுக்கு எதிரிகள் என்ற கண்ணோட்டமே உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பை லீக் போட்டிக்கு முன் பலுசிஸ்தானில் பாகிஸ்தான் செய்யும் அட்டூழியங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போட்டி நடக்கும் லீட்ஸ் மைதானத்தை சுற்றி விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
மேலே பறந்த விமானம்
இது போதாது என அனுமதி இல்லாத விமானம் ஒன்று "பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும்" என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் மைதானத்தை சுற்றி பறந்து வந்தது. இதனால் மைதானத்தை சுற்றிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்கள் கைகலப்பு
இதனிடையே சிறிய அளவில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். முதலில், சில ரசிகர்கள் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைவதாக செய்திகள் வெளியான நிலையில், அது இரு நாட்டு ரசிகர்கள் இடையே நடந்த கைகலப்பு என்பது பின்பு தெரிய வந்தது.
புகார்
உலகக்கோப்பை போட்டியில் நடந்த இந்த பரபரப்பான சம்பவங்களை கண்டு ஐசிசி அதிர்ச்சி அடைந்துள்ளது. விமானம் பறந்தது குறித்து லீட்ஸ் நகர விமான அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் கைகலப்பு குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது என ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது கூட இருநாட்டு ரசிகர்களும் அமைதியாக இருந்த நிலையில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போட்டியில் சர்ச்சை வெடித்துள்ளது.