சென்னை: நடப்பாண்டில் பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களால் பவர் பிளே ஓவர்களில் ஒரு சிக்சரை கூட அடிகக் முடியாமல் இருப்பது குறித்து அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சிறப்பாக தொடக்கத்தை பெற்றது. ஆனால் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும், பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமான தோல்வியை பாகிஸ்தான் அணி பெற்றது.

இதன் மூலம் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் பாகிஸ்தான் அணி உள்ளது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. சேப்பாக்கம் மைதானம் சுழலுக்கு சாதகமான மைதானம் என்பதால், இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாகிஸ்தான் பவுலர்கள் மட்டும் விளாசப்படவில்லை. நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 400 ரன்களை விளாசியது. இந்தியாவில் மைதானங்கள் சிறிய அளவில் உள்ளது. அதேபோல் ஆடுகளங்களும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் போது, பவுலர்கள் சிறிய தவறு கூட செய்யக் கூடாது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் எங்களின் பவுலிங் சிறப்பாக அமைந்தது. ஷாகின் அப்ரிடி தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசினார். தோல்வியின் போது எங்களின் தவறுகளை அறிந்து கொள்வோம். அதேபோல் சில நல்ல விஷயங்களையும் எடுத்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.
அப்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் பவர் பிளே ஓவர்களில் சிக்சர் அடிக்க முடியாமல் திணறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இமாம் உல் ஹக், நாங்கள் கார்போ ஹைட்ரேட்டை விடவும் அதிக புரோட்டீன் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.