மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் தடுமாறி வருகிறது. பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் மழை பெருமளவு குறுக்கிட்டது.
இதில் டேவிட் வார்னர் 38 ரன்களிலும் உஸ்மான் கவாஜா 42 ரன்களிலும், மார்னஸ் லாபஸ்சேன் அதிகபட்சமாக 63 ரன்களும் எடுத்தனர். நடுவரிசையில் மிச்சல் மார்ஸ் 41 ரன்கள் சேர்த்த மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலிய அணி 318 ரன்களில் ஆட்டம் இழந்தது.

இதில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் மூன்று விக்கெட்டுகளையும் ஷாகின் அப்ரிடி, மிர் ஹம்சா மற்றும் ஹாசன் அலி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இதில் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் பத்து ரன்களில் வெளியேற கேப்டன் ஷான் மசூத் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் பொறுமையாக விளையாடி பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அப்துல்லா ஷபிக் 62 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்சின் அபார கேட்ச் ஆல் ஆட்டமிழந்தார். அதிலிருந்து பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஒரு ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். இதேபோன்று கேப்டன் ஷான் மஸ்சூத் 54 ரன்களில் வெளியேற சவுத் சக்கில் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதன் மூலம் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 194 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் தற்போது முகமது ரிஸ்வான் 29 ரன்களுடனும், அமீர் ஜமால் இரண்டு ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியா அடித்த ஸ்கோரை விட பாகிஸ்தான் அணி தற்போது 124 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த இன்னிங்ஸில் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும் நாதன் லயன் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்கள். 24 கோடி ரூபாய் 75 லட்சம் ரூபாய்க்கு ஐபிஎல் மினி ஏலத்தில் சென்ற மிட்செல் ஸ்டார்க் 13 ஓவர்கள் வீசி 50 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட்டுகளை எடுக்காமல் இருக்கிறார்.