மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மெல்போர்ன் சென்று அடைந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வரும் புதன்கிழமை நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதனை தொடர்ந்து வரும் 14ஆம் தேதி பெர்தில் முதல் டெஸ்ட் போட்டியும், 26 ஆம் தேதி மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும், ஜனவரி மூன்றாம் தேதி சிட்னியில் கடைசி டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் பாகிஸ்தான் கேப்டனாக ஷான் மசூத் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சபாஷ் அஹமத், சவுத் ஷகீல், அப்துல்லா ஷபிக் போன்ற வீரர்கள் இந்தத் தொடரில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் இன்று ஆஸ்திரேலியா வந்து அடைந்தார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எந்த ஒரு வரவேற்பும் அளிக்கப்படவில்லை.
மேலும் பாகிஸ்தான் வீரர்களின் லக்கேஜ்களை தூக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யாரையும் அனுப்பவில்லை. இது வீரர்களை அதிர்ச்சி அடைய செய்தது. மேலும் ஒரு ட்ரக்கை அனுப்பி இதில் உங்களுடைய பொருட்களை ஏற்றுமாறு வீரர்களிடம் கூறியிருக்கிறார்கள். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் வீரர்கள் லக்கேஜை வண்டியில் ஏற்றும் வேலையை கூட நாங்கள் தான் செய்யணுமா? என்று கோபப்பட்டு இருக்கிறார்கள்.
இதனை அடுத்து வேறு வழியின்றி வீரர்கள் தங்களுடைய லக்கேஜ்களை நேரடியாக டிரக்கில் சென்று ஏற்றி இருக்கிறார்கள். அதன் பிறகு தங்களுக்கான பேருந்துகளில் ஏறி ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். எனினும் இந்த விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என்றும் பாகிஸ்தான் வீரர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் தங்களுடைய பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் லக்கேஜ்களை ஏற்ற ஒரு ஆட்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஏற்படுத்த முடியாதா? இது வீரர்களை அவமதிக்கும் செயலாகும் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள். மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கு வரும்போது எல்லாம் உச்சபட்ச மரியாதையை ஆசிய நாடுகள் தரும் என்றும் ஆனால் தங்களுக்கு அப்படி ஒரு மரியாதையை ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தருவதில்லை என்றும் ரசிகர்கள் புகார் கூறியிருக்கிறார்கள்.