மெல்போர்ன் : பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முழு நேர கேப்டனாக முஹம்மது ரிஸ்வான் ஆன பிறகு நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி என்பதால் இதனை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அதிகபட்சமாக முகமது ரிஷ்வான் 44 ரன்களும் இறுதியில் நசீம் ஷா 40 ரன்களும், பாபர் அசாம் 32 ரன்களிலும் ஆட்டம் இழக்க பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.
இதை அடுத்து 204 ரன்கள் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்தீவ் ஷாட் ஒரு ரன்னிலும், ஜெக் பிரேசர் 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 28 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஸ்மித், ஜாஸ் இங்கிலீஷ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஸ்மித் 44 ரன்களிலும், ஜோஸ் இங்கிலீஷ் 49 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். மார்னெஸ் லாபஸ்சேன் 16 ரன்களிலும், ஆரோன் ஹார்டி 10 ரன்களிலும் மேக்ஸ்வெல் டக் அவுட்டாகியும் வெளியேற ஆஸ்திரேலிய அணி தோல்வியை நோக்கி சென்றது. எனினும் கேப்டன் பாட் கம்மின்ஸ், தனியாளாக நின்று அபாரமாக விளையாடி 31 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார்.
இதனால், ஆஸ்திரேலிய அணி 33.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் மட்டும் இன்னும் ஒரு 30 முதல் 40 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தால் நிச்சயம் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவி இருக்கும். பாகிஸ்தான் பவுலர்கள் ஹரிஷ் ரவுப் மூன்று விக்கெட்டுகளும், ஷாகின் சா அப்ரிடி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு சுழற்பந்து வீச்சாளர்களை கூட பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.