பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலிய வீரர்கள் படுமோசமான சாதனையை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்கவில்லை. இதுவரை இப்படி நடந்ததில்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடந்த ஒரு நாள் தொடர்களில் ஒரு ஆஸ்திரேலிய வீரராவது அந்த தொடரின் ஒரு போட்டியிலாவது அரை சதம் அடித்து இருப்பார். ஆனால், முதன்முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட ஒரு போட்டியிலும் 50 ரன்கள் அடிக்கவில்லை.

இந்த தொடரின் முதல் போட்டியில் ஜோஷ் இங்லிஸ் 49 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 44 ரன்களும், பாட் கம்மின்ஸ் 32 ரன்களும் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 204 ரன்கள் ஆக இருந்தது. இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து மூன்றாவது போட்டியில் இன்னும் மோசமாக ஆடியது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸீன் அபாட் 30 ரன்கள் அடித்ததே இந்தப் போட்டியில் அதிகபட்சமாக இருந்தது. ஸீன் அபாட் வேகப் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பார்த்தால் மூன்றாவது போட்டியில் ஒரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் கூட 30 ரன்களை எட்டவில்லை. இந்த மோசமான செயல்பாட்டால் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட அரை சதம் அடிக்காத நிகழ்வு நடந்திருக்கிறது. அதுவும் ஆஸ்திரேலியா மண்ணிலேயே இந்த மோசமான சாதனையை ஆஸ்திரேலிய வீரர்கள் செய்து இருக்கின்றனர்.
இந்த தொடரையும் ஆஸ்திரேலியா இழந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்ற ஆஸ்திரேலிய அணி, அடுத்த இரண்டு போட்டிகளிலும் படுமோசமான தோல்விகளை சந்தித்தது. இதை அடுத்து பாகிஸ்தான் 2 - 1 என ஒருநாள் தொடரை வென்று இருக்கிறது.