சிட்னி: இந்தியா உடனான டெஸ்ட் தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் சிக்கி இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த போது, அவர் தன் மனைவியுடன் இசைக் கச்சேரிக்கு சென்றதால் கடும் விமர்சனத்தை சந்தித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரநாள் தொடரை பாகிஸ்தான் 2 - 1 என கைப்பற்றி இருந்தது. மூன்றாவது போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், முன்னணி வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், மார்னஸ் லாபுஷேன் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.

அவர்கள் அனைவரும் அடுத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இல்லாத ஆஸ்திரேலிய அணியை, பாகிஸ்தான் எளிதாக வீழ்த்தி, தொடரையும் கைப்பற்றி இருந்தது. 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்று இருந்தது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பாகிஸ்தான் போட்டி நடந்த அதே நாள் அன்று தனது மனைவியுடன் இசைக் கச்சேரி ஒன்றிற்கு சென்று இருந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
மறுபுறம் ஆஸ்திரேலிய ஊடகங்கள், "பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த போது பாட் கம்மின்ஸ் இசைக் கச்சேரியில் தனது மனைவியுடன் இருந்தார்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு உள்ளன. அதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலிய அணி, தங்கள் சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்து இருப்பதால் இந்த முறை எப்படியாவது இந்திய அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், கேப்டன் பாட் கம்மின்ஸ் தேவையற்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.